அடுத்த 3 மணி நேரத்திற்கு.. கனமழை வெளுக்கும்.. சென்னை டூ தென்காசி வரை.. 8 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் (TN Rain Alert) அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை முதல் தென்காசி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும், நெல்லை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடந்து பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னையிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியது. இன்று மாலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த 3 மணி நேரத்தில்
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை முதல் தென்காசி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னி வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை தென்காசி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்காசியில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
முன்னதாக வானிலை மையம் இன்று மதியம் வெளியிட்டிருந்த வானிலை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக இன்று திருவள்ளூர், ராணிபேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வியாழக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 15-08-2025 முதல் 19-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழை பெய்யும்
சென்னையில் இன்று புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications