"இன்றே கடைசி.." சென்னையில் அதீத வெப்பம் இன்றுடன் ஓவர்! நாளை முதல் நல்ல செய்தி- வெதர்மேன் குட் நியூஸ்
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த அதீத வெப்பம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இந்தாண்டு பருவமழை முடிந்தது முதலே வெப்பம் உச்சமடையத் தொடங்கியது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் தொடும் வெப்பம் இந்தாண்டு பிப். மாதமே உச்சம் தொட்டது.

அப்போது பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகத் தொடங்கியது. குறிப்பாக ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டது.
சென்னை வெப்பம்: நமது தலைநகர் சென்னையிலும் கூட விரைவிலேயே வெப்பம் உச்சம் தொட்டது. தினசரி எங்கு அதிகபட்ச வெப்பம் பதிவானது என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு நாளும் வெளியிடும். அந்த லிஸ்டில் பெரும்பாலும் சென்னை வராது என்ற போதிலும் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை எதிர்கொண்டனர். இதற்குக் காரணம் நகரில் இருக்கும் ஈரப்பதம்.
சென்னை கடலுக்கு அருகே அமைந்துள்ளதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதுவே சென்னைக்கு எதிராகத் திரும்பி விடுகிறது. அதாவது ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடலில் உருவாகும் வியர்வைச் சீக்கிரம் ஆவியாகாது. இதனால் உடலில் பிசுபிசுப்பு தன்மை ஏற்படும். வியர்வைத் தான் உடல் சூட்டை குறைக்கும் நிலையில், அதை இந்த ஈரப்பதம் தடுப்பதால் மக்கள் பெரும் அசவுகரியத்தை எதிர்கொள்கிறார்கள்.
அதீத வெப்பம் காரணம் என்ன: இதைத் தான் ஆய்வாளர்கள் மக்கள் உணரும் வெப்பம் (feels like temperature) என்று குறிப்பிடுகிறார்கள். வெப்பமும் ஈரப்பதமும் சேரும் போது அது எந்தளவுக்கு நம்மை வாட்டி வதைக்கும் என்பதற்குச் சென்னை நகரமே ஒரு சாட்சி.. சென்னை மட்டுமின்றி அதாவது கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறைவாகப் பதிவானாலும் மக்கள் அதிக வெப்பத்தை உணர்வார்கள்.
இன்று கூட சென்னையில் 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தான் பதிவானது. ஆனால், அது ஈரப்பதம் காரணமாக அது 122 டிகிரி பாரன்ஹீட்டை போலவே இருந்தது. ஈரப்பதம் சென்னை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகச் சென்னையில் நிலவும் வெப்பமும் கணிசமாக அதிகரித்தே உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே பதிவாகி வருகிறது.
வெதர்மேன்: இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னையில் நிலவும் வெப்பம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை இருக்கும் எனப் பதிவிட்ட தமிழ்நாடு வெதர்மேன், ஊட்டியில் மேகங்கள் சூழ்ந்து வருவதாகவும் கேரளா, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
வெப்பம் குறையும்: அதற்கு நெட்டிசன் ஒருவர், "முன்பு நீங்கள் ஜூன் 1 முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் வெப்பம் குறையும் என கூறியிருந்தீர்கள்.. ஆனால், இன்றும் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது" என்பது போலக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளிட்ட வெதர்மேன், "சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாவது இதுவே கடைசி நாள்" எனப் பதிவிட்டுள்ளார். அதாவது நாளை முதல் சென்னையில் வெப்பம் குறையப் போகிறது என்பதே அவரது கருத்தாகும்.
நாளை முதல் நல்ல செய்தி: முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications