குடை அவசியம் மக்களே.. தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி அன்று மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தேனி, தென்காசி, கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதலே தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. ஏற்கனவே கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிகளவில் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் குளிர்ந்த சூழல் உருவாகி இதமான வானிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications