மிதக்கும் நெல்லை ரயில் நிலையம்.. கேன்சல் ஆன ரயில்கள்.. ரயில்வே வெளியிட்ட மேஜர் அறிவிப்பு
நெல்லை: நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமாகவும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபோக மற்றொரு முக்கிய தகவலையும் சொல்லியிருக்கிறது.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. அதேபோல், நெல்லை சந்திப்பு - தாழையூத்து இடையே தண்டவாளத்தில் கீழ் உள்ள ஜல்லி கற்களை மழை வெள்ளம் அடித்து சென்றது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 3 குளங்கள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்டவாளம் கீழ்ப்பகுதி ஜல்லி மற்றும் மண் அரித்து செல்லப்பட்டது.

தற்போது மழை விட்டுள்ளதால் தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நெல்லைக்கு ரயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதனால், மறு அறிவிப்பு வரும் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் புறப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கத்திலும் நாளை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தவிர திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து இயக்கப்பட உள்ளது.
நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையிலிருந்து இயக்கப்படும். மதுரை - நெல்லை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்டு செல்லும். அதேபோல் தூத்துக்குடி - சென்னை ரயில் மதுரையிலிருந்து புறப்படும். புனலூர் - மதுரை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில் நாகர்கோவில் - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து புனலூருக்கு புறப்பட்டு செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications