களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்.. மழை நின்ற அடுத்த நொடி சென்னை மட்டுமில்லை செங்கல்பட்டிற்கும் உதவி
சென்னை: தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சார்பிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிக்ஜாம் புயல் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளிலும் கூட நீர் தேங்கியது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சென்னையில் கனமழை பெய்தது. இதுவே நிலைமை மோசமாகக் காரணமாகும். எல்லா பகுதிகளிலும் கனமழையும் பெய்த நிலையில், நீர் தேங்கியது.
கொட்டிய மழை: கடல் சீற்றம் காரணமாக வெள்ளத்தைக் கடலும் உள்வாங்கவில்லை. இதனால் தேங்கிய நீரின் அளவு வேகமாக அதிகரித்தது. இதற்கிடையே இன்று காலை மழை குறைந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய சாலைகளில் நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக மற்ற சாலைகளிலும் நீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பல இடங்களிலும் நீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு உணவு கிடைப்பதிலும் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், பிரட்டிற்கும் கூட பல இடங்களில் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தொடர் மழை காரணமாக வீடுகளிலும் நீர் புகுந்த நிலையில், பல இடங்களில் வீட்டில் சமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
உணவு இல்லை: மேலும், உணவகங்களும் மூடப்பட்ட நிலையில், பேட்சுலர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். வீடுகளைச் சுற்றி இருக்கும் நீரைத் தாண்டி வந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் அவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

விஜய் ரசிகர்கள்: இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ விஜய்யின் ரசிகர்கள் களத்தில் குதித்துள்ளனர். சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினர். நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குப் படகு மூலம் சென்ற விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு உணவை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அதேபோல சென்னையைப் போலவே இந்தப் புயல் காரணமாகச் செங்கல்பட்டு மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேரடியாக புஸ்ஸி ஆனந்த் நிவாரணம் வழங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications