மேலும் வாட்டி வதைக்கும்.. 15 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று, நாளை 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இன்று திண்டுக்கல், விருதுநகர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, நெல்லையில் வெப்ப அலை வீசும் எனவும், ஏற்கனவே அனலில் தகித்து வரும் மதுரையில் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொஞ்சமாவது மழை பெய்யுமா என எதிர்பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் மட்டுமே அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் அங்கேயும் கடந்த இரு நாட்களாக வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது.

மதுரை, கரூர் போன்ற மாவட்டங்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெளியில் செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தான் இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். இதனால் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம்" என்று கூறப்பட்டுள்ளது. வெப்ப அலை என்றால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதாகும்.












Click it and Unblock the Notifications