11 மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்.. தென் தமிழகத்தில் மீண்டும் மழை கொட்டும்!
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை அதிகாலை பனிமூட்டம் நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோன்று வரும் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற போதிலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெய்த மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.

பனி மூட்டம் நிலவும்
இதன் பின்னர் கடந்த இரு நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என 11 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
01-02-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 02-02-2026 மற்றும் 03-02-2026: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பநிலை மாற்றம்: 29-01-2026 முதல் 02-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்?
சென்னையில் இன்று (29-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (30-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 29-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
30-01-2026: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 31-01-2026 முதல் 02-02-2026 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications