சென்னைக்கு சம்பவம் இருக்கு.. வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்! தேதி குறிச்சாச்சு
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னையில் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில் சென்னையில் மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "கடலூர் தொடங்கி டெல்டா மற்றும் தென் தமிழகம் வரை பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலையில், 20 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. கடந்த 4 நாட்களில் 3வது முறையாக இந்த அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இப்படியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள்
இன்று காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலூர் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை தொடரும். புயல் அமைப்பை பொறுத்தவரை, இலங்கை கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மெல்ல வலுப்பெற்று வருகிறது. இது நமக்கு சாதகமான நிலையாக மாறியிருக்கிறது. நவ.26ம் தேதி வரை காத்திருப்போம். இது குறித்த இன்னும் கூடுதலான தகவல்கள் தெரிய வரும்.
சென்னைக்கு மழை
சென்னையை பொறுத்தவரை, போதுமான மழைப்பொழிவு இல்லை. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு தேவையான மழை தற்போது பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கான பற்றாக்குறை நிலவுகிறது. மழைப்பொழிவை தீவிரப்படுத்தும் MJO எனப்படும் உலகளாவிய வானிலை அமைப்பு டிசம்பர் மாதத்தில் இந்திய பெருங்கடலுக்கு திரும்ப வரவில்லை. எனவே மழைக்கான வாய்ப்பு குறைவு.
இந்த சூழலில், தற்போது வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கான மழை தேவையை பூர்த்தி செய்யும். அதற்கு பின்னர் இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை 2 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 23ஆம் தேதி வரை சராசரியாக 309.9 மில்லி மீட்டர் அளவுக்கு தமிழகத்தில் மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலத்தில் 317.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது.
எந்த மாவட்டங்களில் மழை அதிகம்?
குறிப்பாக சென்னையில் 24 சதவீதமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 11 சதவீதமும் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது. செங்கல்பட்டுதான் தமிழகத்திலேயே மழை மிக குறைவாக செய்துள்ள மாவட்டமாகும். அதிகபட்ச மழை பொழிவை பொறுத்தவரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 117 சதவீதம் மழை கூடுதலாக பெய்திருக்கிறது. வேலூரில் 50 சதவீதம், தென்காசியில் 52 சதவீதம், ராணிப்பேட்டையில் 58 சதவீதம் அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகி இருக்கிறது.
அதேபோல கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி, நேற்று வரை பெய்த மழை அளவுகளில் 2வது நாளாக நேற்று அதிகபட்சமாக மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் நவம்பர் 18ஆம் தேதி அதிகபட்சமாக மழை பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications