மேஜிக் நடக்கப்போகுது! அக்னி தொடங்கும் நேரத்தில்.. அப்படியே குறையும் வெயில்! வெதர்மேன் அப்டேட்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் மே.4ம் தேதி அக்னி வெயில் தொடங்க இருக்கிறது. எனவே வெயில் இன்னும் உக்கிரமடையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மே.4க்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
பொதுவாக சித்திரை மாதம் 21-ம் நாள் தொடங்கி வைகாசி மாதம் 14-ம் நாள் வரை இந்த 25 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாக கணக்கிடப்படுகிறது. இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால், இந்த முறை வெயில் குறைவாக இருக்கும் என வெதர்மேன் கூறியிருக்கிறார்.

வெயிலுக்கு காரணம் என்ன?
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "இன்னும் எல் நினோ தொடங்கவில்லை. எனவே, தற்போது நிலவும் வெயிலுக்கு எல் நினோ மட்டுமே காரணமல்ல. ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்று நிலவுவதால் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. கோடை மழை பொய்த்ததால், மண்ணில் ஈரப்பதம் குறைந்து 'Evaporative Cooling' (ஆவியாதல் மூலம் குளிர்ச்சியடைதல்) தடைபட்டுள்ளது. அதேபோல மேகக்கூட்டங்கள் இல்லாததால் சூரிய கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாகவும் தீவிரமாகவும் உள்ளது. இதெல்லாம்தான் தற்போது வெயில் மண்டையை பொளக்க காரணம்.
மழைக்கு வாய்ப்பு
ஆனால், வருகிற நாட்களில் தென்னிந்தியாவில் மழைக்கான சூழல் சாதகமாகத் தெரிகிறது. கேரளாவின் உள் மாவட்டங்கள், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி போன்றவை) நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பச் சலனம் காரணமாகச் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களைப் பொறுத்தவரை மே.1-5 வரை உச்சகட்ட வெப்பமான காலமாக இருக்கும். நிலக்காற்று பலமாக வீசுவதால் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கலாம்.
பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் மே 5-க்குப் பிறகு வளிமண்டல மாற்றங்களால் வெப்பம் 3-4 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ளது. இது சென்னைவாசிகளுக்குப் பெரிய ஆறுதலாக அமையும்.
அக்னியும் வெயிலும்
மே 5-க்குப் பிறகு வட இந்தியாவில் வெப்பம் குறையும் என்பது முக்கியமானது. அங்கிருந்து வீசும் வெப்பக் காற்று குறைந்தாலே தென்னிந்தியாவின் வெப்பத் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படும். அப்படியெனில் அக்னி தொடங்கும் (மே.5) தேதியிலிருந்து வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications