சென்னையில் நடந்த அதே சம்பவம்.. பெங்களூரில் அதிகாலையில் கேட்ட சத்தம்.. எழுந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
பெங்களூர்: இன்று அதிகாலை பெங்களூரில் பல பகுதிகளில் திடீரென கேட்ட சத்தம் மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.
தெற்கு மற்றும் கிழக்கு பெங்களூர் முழுவதும் வசிப்பவர்கள் இந்த சத்தத்தை கேட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை 4.30 மணி முதல் 5:30 மணி வரை ஒலித்த சத்தமான பட்டாசு போன்ற ஒலியால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பனசங்கரி, ரிச்சர்ட்ஸ் டவுன் உட்பட பல சுற்றுப்புறங்களில் இந்த கடுமையான சத்தம் கேட்டது.

அதிகாலையில் ஏற்பட்ட கடுமையான இடி மின்னல் காரணமாக இந்த சத்தம் கேட்டது. இயல்பாக வரக்கூடிய இடி மின்னலை விட இது வலிமையாக இருந்ததால் இந்த சத்தம் கேட்டது. இது போன்ற வலிமையான இடி மின்னலை நாங்கள் கேட்டதே இல்லை. இந்த சத்தம் அவ்வளவு வலிமையாக இருந்தது. இதில் தூங்கவே முடியவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
பலரும் இது உண்மையில் இடி மின்னல் சத்தமா அல்லது வேறு ஏதாவது சோனிக் பூம் போன்ற சத்தமா என்று கேட்டு போஸ்ட் செய்து வருகின்றனர். அங்கே கனமழைக்கு இடையே கடுமையாக இடிமின்னல் அடித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டிலும் இதே போல் மழை நேரத்தில் சென்னையில் கடுமையான இடி மின்னல் அடித்தது.

பொதுவாக மின்னல் என்பது மேகத்திற்கும் - மேகத்திற்கும் இடையில், மேகத்திற்கு உள்ளேயே, மேகத்திற்கும் பூமிக்கும் இடையில், மேகத்திற்கும் காற்றிற்கும் இடையில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு நேர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் வானத்தில் எதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகே வரும் போது அவை இரண்டிற்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து சக்தியை வெளிப்படுத்தும்.
இவைதான் மின்னல்கள் ஆகும். இந்த மின்னூட்ட வேறுபாடு பூமிக்கும் மேகத்திற்கும் இடையே ஏற்படும் பட்சத்தில் அவை முகில் - புவி மின்னல் எனப்படும். அதாவது மின்னல் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும். இது போக முகில் - முகில் மின்னல் இரண்டு மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னல் ஆகும்.

முகில் மின்னல், ஒரே மேகத்திற்கு உள்ளேயே ஏற்படும் மின்னூட்ட வேறுபாட்டால் ஏற்படும் மின்னல் ஆகும். மேற்கட்ட இரண்டும் பூமியை தாக்காது. காற்றுக்கும் - மேகத்திற்கும் இடையே ஏற்படும் மின்னல் முகில் - வளி மின்னல் ஆகும்.
இதில் சென்னைக்கு அருகே கடல் பகுதியில் புவி - முகில் மின்னல்தான் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆங்காங்கே மின்னல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் இரவு முதல் பிற்பகல் வரை.. இரவு பகல் பாராமல் பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி உள்ளது. விடாமல் மின்னல் வெட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அதேபோன்ற மின்னல் பெங்களூரில் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் மழை பெய்துள்ளது நேற்று.












Click it and Unblock the Notifications