சேலத்தில் "டெவில்.." பார்க்கவே பயங்கரமா இருக்கே.. வெதர்மேன் பகீர் வீடியோ! என்ன மேட்டர்
சென்னை: சேலத்தில் திடீரென டஸ்ட் டெவில் வீசி இருக்கிறது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் டஸ்ட் டெவில் என்றால் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது மிக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக ஈரோடு, கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் உச்சம் தொடுகிறது. இந்த அதீத வெப்பத்தால் புழுதி புயல்களும் கூட ஆங்காங்கே ஏற்படுகிறது.

வீடியோ: இதற்கிடையே எக்ஸ் பக்கத்தில் முரளிதரன் என்பவர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் நெடுஞ்சாலையில் மிகப் புழுதி புயல் போன்ற ஒன்றைப் பார்க்க முடிகிறது. சுமார் 31 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் அந்த புழுதி புயல் மிக உயரமாக இருப்பது தெரிகிறது. மேலும், அருகே இருக்கும் சின்ன பொருட்களும் அதில் பறப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை சேலத்தில் எடுத்துள்ளனர்.
வெதர்மேன்: முரளி என்பவர் பகிர்ந்த அந்த வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் அவர், "சேலத்தில் டஸ்ட் டெவில் (Dust Devil).. ஆனால் இதை டொர்னாடோ / ட்விஸ்டர் என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். வறண்ட காலங்களில் இவை பொதுவாகவே ஏற்படும்.. டஸ்ட் டெவிலில் காற்றின் புனல் மேகங்களுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்காது" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
டஸ்ட் டெவில் என்றால் என்ன: இந்த டஸ்ட் டெவில் என்பது ஒரு வலுவான அதேநேரம் குறுகிய காலம் மட்டுமே நீட்டிக்கும் ஒரு வித புழுதி புயல்.. இவை பொதுவாகச் சிறிய அளவிலேயே இருக்கும். சில அரிதான நேரங்களில் இவை பெரிதாகவும் இருக்கலாம்.. இதில் காற்று பொதுவாக மேல்நோக்கி தள்ளப்படும்.. பெரும்பாலான நேரங்களில் இந்த டஸ்ட் டெவிலால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. சில நேரங்களில் மட்டும் சிறியளவில் பாதிப்பு ஏற்படும்.
அதேநேரம் இதை நாம் வெளிநாடுகளில் ஏற்படும் டொர்னாடோ எனப்படும் சூறாவளி உடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் இதையே தான் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுக்க சம்பவம் செய்யும் வெயில்! ஆனா இந்த ஒரு பகுதியில் மட்டும் மழை இருக்கு! எங்கு தெரியுமா?
வேறுபாடுகள் என்ன: டொர்னாடோ என்பது மிகவும் வலிமையான ஒரு சூறாவளி.. இது மிக மோசமான சேதத்தையும் உயிரிழப்புகளையும் கூட ஏற்படுத்தலாம். இவை பொதுவாக நீண்ட நேரம் நீட்டிக்கும். இவை செல்லும் பகுதிகளில் இருக்கும் வீடுகள் மொத்தமாக காலி செய்துவிடும். இந்த சூறாவளி மணிக்கு 300 மைல் வேகத்தில் வீசக்கூடும். இது பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.
டொர்னாடோவின் மேற்பகுதி புயல் மேகங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த டஸ்ட் டெவிலில் அவை மேகங்களுடன் இணைக்கப்பட்டு இருக்காது. அதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடாகும்.
வானிலை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மேலும், தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 39°–42° செல்சியஸ் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications