சென்னையில் வானத்திற்கும் - பூமிக்கும்.. ஆட்டம் போடும் மின்னல்! திடீர்ன்னு ஏன் இப்படி? என்ன காரணம்?
சென்னை: சென்னை மழைக்கு இடையே சென்னையில் ஆங்காங்கே மின்னல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை.. இரவு பகல் பாராமல் பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி உள்ளது.
பொதுவாக மின்னல் என்பது மேகத்திற்கும் - மேகத்திற்கும் இடையில், மேகத்திற்கு உள்ளேயே, மேகத்திற்கும் பூமிக்கும் இடையில், மேகத்திற்கும் காற்றிற்கும் இடையில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு நேர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் வானத்தில் எதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகே வரும் போது அவை இரண்டிற்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து சக்தியை வெளிப்படுத்தும்.

இவைதான் மின்னல்கள் ஆகும். இந்த மின்னூட்ட வேறுபாடு பூமிக்கும் மேகத்திற்கும் இடையே ஏற்படும் பட்சத்தில் அவை முகில் - புவி மின்னல் எனப்படும். அதாவது மின்னல் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும். இது போக முகில் - முகில் மின்னல் இரண்டு மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னல் ஆகும்.
முகில் மின்னல், ஒரே மேகத்திற்கு உள்ளேயே ஏற்படும் மின்னூட்ட வேறுபாட்டால் ஏற்படும் மின்னல் ஆகும். மேற்கட்ட இரண்டும் பூமியை தாக்காது. காற்றுக்கும் - மேகத்திற்கும் இடையே ஏற்படும் மின்னல் முகில் - வளி மின்னல் ஆகும்.
இதில் சென்னைக்கு அருகே கடல் பகுதியில் புவி - முகில் மின்னல்தான் ஏற்பட்டுள்ளது.
சென்னை மழை: இன்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர சென்னையில் உள்ள 20 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. மழை நின்றவுடன் இவ்விரு சுரங்கப்பாதைகளும் சரிசெய்யப்படும்.
பலத்த காற்று வீசியதால் சென்னையில் 8 மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது வரை ஒரு மரம் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும். 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளன.
300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை. சென்னையில் 89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் 13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் தயாராக உள்ளனர்.
அதீத மின்னல் வெட்டு: இந்த மழைக்கு இடையே சென்னையில் ஆங்காங்கே மின்னல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை.. இரவு பகல் பாராமல் பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி உள்ளது. விடாமல் மின்னல் வெட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
500க்கும் அதிகமான மின்னல்கள் மேகத்தில் இருந்து கடலில் தாக்கின. அதேபோல் அதிக அளவில் மின்னல்கள் நிலப்பகுதியில் தாக்கி உள்ளன. சில மழை மேகங்கள் சென்னை வான் பகுதிக்கு வரும் முன் வலிமை இழந்தன. சில தரைப்பகுதிக்கு வந்து மின்னல்களை தாக்கின. இதனால்தான் சென்னை முழுக்க லைட் போட்டது போல.. வெளிச்சமாக இருந்தது.












Click it and Unblock the Notifications