ஒரு பக்கம் கனமழை.. மறுபக்கம் நீரை உள்வாங்காத கடல்.. சென்னையில் நீர் வடியாமல் இருக்க காரணமே இதுதான்
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதைச் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதலே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கி உள்ளது.

பல மணி நேரம் ஆக நீர் வடியாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே மழை நீர் வடியாமல் இருக்க என்ன காரணம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.
ராதாகிருஷ்ணன்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "கடதந் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறுகிய காலத்தில் அதிகபட்ச மழை கொட்டி தீர்த்துள்ளது. இதுவே பிரச்சினைக்குக் காரணம்.. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்வாங்கவில்லை: தண்ணீர் ஏன் வடியாமல் இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆறுகளில் இருந்து கடலுக்குச் செல்லும் நீரைக் கடல் உள்வாங்காமல் இருப்பதே இதற்குக் காரணமாகும். கூவம், அடையாறு, கோசஸ்தலை, பக்கிங்காம் கால்வாய் மற்றும் சிறு கால்வாய்கள், வெள்ள நீர் வடிகால் கால்வாய்கள் கடலில் சென்று சேரும் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக இந்த நீரைக் கடல் உள்வாங்காமல் இருக்கிறது. இதன் காரணமாகவே மோட்டார் போட்டாலும் தண்ணீர் குறையாமல் இருக்கிறது.
விரைவில் மழை குறையும் என்று எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம். இன்று இரவு 8.30 மணிக்கு மழை குறையும் என்கிறார்கள். சிலர் நள்ளிரவு ஒரு மணி வரை மழை இருக்கும் என்கிறார்கள். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடல் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
8.30க்கு மேல்: சவால்களைக் கடந்தும் புயல் வெள்ளத்தை சாமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்வர், அமைச்சர்கள், மேயர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். மழை நீரைக் கடல் உள்வாங்காமல் இருக்கும் பிரச்சினை இன்று இரவு 8.30 மணிக்கு மேல் சற்று முன்னேறும் என்கிறார்கள்.
கரையேறும் இருக்கும் மக்களுக்காக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. இருப்பினும், பொதுமக்கள் வீடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதால் முகாம்களுக்கு வர மாட்டார்கள்.. உணவை மட்டும் அவர்கள் வாங்கிச் செல்வார்கள். அதன்படி இன்று ஒரே நாளில் 2.43 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. பிரட், பால் பவுடர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொட்டிய கனமழை: பல இடங்களில் கனமழை கொட்டி வந்ததே இந்தளவுக்கு நீர் தேங்கக் காரணமாகும். மழையைச் சமாளிக்க மாநகராட்சி சார்பில் 23 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 50 சென்டர்களில் உணவு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தேவைப்பட்டால் தனியார் ஓட்டல்களில் உணவைத் தயாரிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.
இரவு மழை குறைந்து கடல் நீரை உள்வாங்கத் தொடங்கியதும் முதலில் பிரதான சாலைகளில் இருந்து மழை நீர்த் தானாக வடியும். பிறகு மற்ற சாலைகளுக்குத் தனிக் கவனம் செலுத்தப்படும். அனைத்து பகுதிகளிலும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம். சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 6,119 கிமீ சுற்றளவில் மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. இதை ஒரு நாள் மழைக்குத் தேங்கிய நீர் எனச் சொல்ல முடியாது. அதீத மழை பெய்ததே நிலைக்குக் காரணம்" என்றார்.
11 சுரங்கப்பாதைகள்: தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் பேசுகையில், "சென்னையில் 33 செமீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் சுமார் 33% மழை கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் பெய்துள்ளது. மேலும், நீர் தேங்கியதால் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. நாளை காலை அவை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications