வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? அடுத்த 3 மாதங்கள் எப்படியிருக்கும்? மழை மனிதர் ரமணன் விளக்கம்
சென்னை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு மழை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை காலம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது. பொதுவாக இரு பருவமழை ஒரே நேரத்தில் இருக்காது.

எனவே தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகிச் சென்ற பிறகுதான் வடகிழக்கு பருவமழை பெய்யும்.இது எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காவிரி நீருக்காக போராடி போராடி பயிர்கள் வாடிவரும் நிலையில் தற்போது இந்த வடகிழக்கு பருவமழை டெல்டா பகுதிகளுக்கு தேவையாக உள்ளது.
டெல்டா பகுதிகளில் மழை பெய்தால் பயிர்கள் தப்பும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை கை கொடுத்தது. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் மேற்கு திசை காற்று, வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி ஆகியவற்றால் மழை பெய்து வருகிறது.
இதனால் நீர் நிலைகளில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனால் பாசனத்திற்கு தேவையான நீர் இல்லை. இதனால்தான் கர்நாடகாவிடம் நமது உரிமையை கேட்டு வருகிறோம். அவர்களோ உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட மதிக்காமல் உள்ளனர். இந்த ஆண்டு எல் நினோ வருடம் ஆகும். இந்த காலத்தில் மழையின் அளவு சராசரியைவிட குறைவாகவும் இருக்கும் கூடுதலாகவும் இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது என்பது குறித்து தந்தி டிவிக்கு ரமணன் அளித்த பேட்டியில் தென் மேற்கு பருவமழை முழுமையாக விலகினால் மட்டுமே வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
அந்த வகையில் இந்த முறை அக்டோபர் 2 அல்லது 3 ஆவது வாரத்திற்கு பிறகு தொடங்கலாம். அதாவது அக்டோபர் 20 தேதிக்கு பிறகு சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிடும். நம்மால் 10 நாட்களுக்கு உண்டான வானிலையை கணிக்கலாம். ஆனால் அவற்றில் கடைசி 5 நாட்கள் நம்பகத்தன்மை இருக்காது. அதனால்தான் ஐந்து ஐந்து நாட்களாக வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் வடகிழக்கு பருவமழை குறித்தும் அறிக்கை வெளியாகும். இந்த முறை எல்நினோ ஆண்டாக இருப்பதால் இந்த முறையும் இயல்பான மழை இருக்கும் என வானிலை மையமும் அறிவித்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கென நிபந்தனைகள் உள்ளன. அவை- கடலோர காற்று முழுவதும் கிழக்கு திசை நோக்கி வீசும். கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில்மழை பெய்யும். அடர் மேக பகுதிகள் நம் கடற்கரையை நோக்கி வர வேண்டும் அப்போதுதான் ஒரு தொடர் மழை இருக்கும் என்கிறார்கள். இந்த நிபந்தனைகள் ஏற்படும் சூழலில் சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள். இவ்வாறு ரமணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications