2023ல் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது ஏன் தெரியுமா?
சென்னை: எல்லாருமே 2023ம் ஆண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம்போல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். அதுவும் வடகிழக்கு பருவ காற்றின் முதல் மழைக்கே அளவுக் கடந்த பீதியில் இருக்கிறார்கள். உண்மையில் 2023ல் பள்ளிக்கரணையும், மடிப்பாக்கமும் வெள்ளத்தில் சிக்கியதற்கு காரணம் நாராயணபுரம் ஏரி தான். இந்த நாராயணபுரம் ஏரியில் கடந்த ஆண்டு என்ன நடந்தது.. ஏன் அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டது என்பதை பார்ப்போம்..
தென்சென்னையின் முக்கியமான நீர் வடிகால் என்றால் அது கீழ்க்கடளை ஏரி வாய்க்கால் தான். சென்னையில் உள்ள ஏரிகளை பொறுத்தவரை ஒன்றோடு ஒன்று இணைந்த கால்வாய்களை கொண்டவை. ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், இன்னொரு ஏரிக்கு தண்ணீர் வந்து செல்லும். அப்படித்தான் பல ஏரிகள் ஒன்றோடு ஒன்று சார்ந்து உள்ளன.

பல்லாவரம் ஏரி, நன்மங்கலம் ஏரி, ஆகிய இரண்டு ஏரிகள் நிறைந்தால், அந்த ஏரி தண்ணீர் கீழ்கட்டளை கால்வாய் வழியாக நாராயணபுரம் ஏரிக்கு செல்லும். கடந்த முறை டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்தது. ஏற்கனவே அக்டோடபர், நவம்பரில் பெய்த மழையால் சென்னையில் ஏரிகள் எல்லாம் 90 சதவீதத்திற்கு மேல் முழுமையாக நிரம்பி இருந்தன.
இதனிடையே அதிகப்படியான மழை மிக்ஜாம் புயலால் பெய்து கொண்டே இருந்தது. சென்னை வெள்ளத்தில் சிக்குவதற்கு முன்பே கோவிலம்பாக்கத்தின் சுண்ணாம்பு கொளத்தூர், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் பகுதிகள் வெள்ளத்தில் சிக்க தொடங்கிவிட்டன. நாராயணபுரம் ஏரிக்கு சென்ற அதிகப்படியான நீர், கரை உடைந்து வரத்தொடங்கின.. சிறிய அளவில் வந்து கொண்டிருந்த தண்ணீர், மழை பெய்ய பெய்ய அதிகரித்துக் கொண்டே சென்றது. எங்கெல்லாம் தடுப்பு சுவர் இல்லையோ அங்கெல்லாம் தண்ணீர் வேகமாக வெளியேற தொடங்கியது. ஆக்கிரமிப்புகளால் மிகச்சிறிய அளவிற்கு மாறி கிடக்கும் அந்த கால்வாய் மற்றும் நீர்வழிப்பாதை, ஒரு கட்டத்தில் அதிகப்படியான தண்ணீர் தாங்கு திறனை முழுமையாக இழந்தது.
இந்த சூழலில் இரவில் மெல்ல மெல்ல வீடுகளுக்கு தண்ணீர் வர தொடங்கிய நிலையில், விடிவதற்குள் நிலைமை மிக மோசமானது. ஏனெனில் முதல் நாள் இரவே பள்ளிக்கரணை ஏரி நிரம்பிவிட்டது. அதன்பிறகும் இடைவிடாமல் 36 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் அதிகப்படியான வெள்ளம் பல்லாவரம் ஏரி, நன்மங்கலம் ஏரி பகுதியில் இருந்து தண்ணீர் கீழ்கட்டளை வழியாக நாராயணபுரம் ஏரிக்கு போக முடியாமல் ஊருக்குள் புகுந்தது. இந்த தண்ணீர் அப்படியே மடிப்பாக்கம் மொத்தமும் பாய்ந்தது.. மொத்த மடிப்பாக்கமும் வெள்ளத்தில் சிக்கியது. கீழ்தளத்தில் உள்ள எல்லா வீடுகளும் மொத்தமாக பாதிக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர்களை அடித்து நொறுக்கி கீழே தள்ளிவிட்டு தண்ணீர் வேகமாக வெளியேறியது. அந்த தண்ணீர், மடிப்பாக்கத்தின் லட்சுமி நகர், எல்ஐசி நகர், குபேரன் நகர், பெரியார் நகர், சதாசிவம் நகர் என பரவி இறுதியாக பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலையை காலி செய்தது.
மறுபுறம் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்ததால் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் பள்ளிக்கரணையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது, அடுக்குமாடி வீடுகளில் நிறுத்தப்பட்ட கார்கள் எல்லாம் வெள்ளத்தில் சிக்கின. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பவர்கள் படகுகள் மூலமே மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. '
பல்லாவரம் - துரைப்பாக்கத்தை இணைக்கும் சாலையிலும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கரை உடைப்பால் ரேடியல் சாலை முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. இந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணம் ஒன்றே ஒன்று தான். ஏற்கனவே ஏரிகள் நிரம்பி இருந்த சூழலில், இடைவிடாமல் 36 மணி நேரம் பெய்த மழை தான் வெள்ள பாதிப்பு காரணம் ஆகும். இன்னொரு காரணம் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications