தமிழகத்தை வாட்டி வதைக்கும் குளிர்! வெப்பநிலை குறைய காரணம் இதுதான்! வெதர்மேன் கொடுத்த விளக்கம்
சென்னை: நாடு முழுவதும் வீசி வரும் குளிர் அலையின் தாக்கம், தமிழ்நாட்டிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த குளிருக்கான காரணம் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, "கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் இந்திய தீபகற்பத்தின் பல பகுதிகளில் இரவுகள் கணிசமாகக் குளிர்ந்து வருகின்றன. இந்தத் திடீர் குளிர்ச்சிக்கு 'கதிர்வீச்சு குளிர்ச்சி' என்னும் வானிலை நிகழ்வுதான் முக்கிய காரணம்.

பகல் நேரத்தில் நிலப்பரப்புகள் சூரிய ஒளியை உறிஞ்சி வெப்ப ஆற்றலை சேமிக்கின்றன. இரவு நேரத்தில், சூரிய சக்தி இல்லாத நிலையில், இந்த ஆற்றல் கதிர்வீச்சாக வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் திரும்ப வெளியேறுகிறது. இந்த வெப்ப வெளியேற்றத்தின் வேகமே இரவின் குளிர்ச்சியைத் தீர்மானிக்கிறது. அதாவது பூமியை விட்டு வெப்பம் எவ்வளவு வேகமாக வெளியேறுகிறதோ, அவ்வளவு சீக்கிரமாக பூமி குளிர்ச்சியடையும்.
சமீபத்திய குளிர்ச்சியான இரவுகளுக்குக் காரணம் வானத்தில் மேகங்கள் இல்லாததுதான். மேகமில்லா வானம், உயர் அழுத்தம் மற்றும் பலவீனமான காற்று ஆகிய மூன்று முக்கிய வளிமண்டல நிலைமைகள் குளிர்ச்சியைத் தீவிரப்படுத்தியுள்ளன.
மேகமில்லா வானம்
பொதுவாக, வடகிழக்குப் பருவமழையோ, குறைந்த அழுத்த அமைப்புகளோ இருக்கும்போது மேகங்கள் போர்வை போலச் செயல்பட்டு, பூமியின் மேற்பரப்பிலிருந்து வெளியாகும் வெப்பத்தை உறிஞ்சி, அதை திருப்பி அனுப்புகின்றன. இதனால் இரவுகள் வெப்பமாகவே இருக்கும். ஆனால், தற்போது மேகமற்ற வானம் நிலவுவதால், வெப்பம் வேகமாக விண்வெளிக்கு வெளியேறி, பூமி வேகமாக குளிர்கிறது. எனவே இரவு குளிராக இருக்கிறது.
உயர் அழுத்தம்
மழை காலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்று அடிக்கடி செய்திகளில் வாசிப்பை கேட்டிருப்போம். அதுபோது உயர் அழுத்தம் சில நேரங்களில் நிலவும். இது குறைந்த அழுத்தத்திற்கு நேர் எதிரானது. இதில் காற்று மேல்மட்டத்திலிருந்து கீழ்நோக்கி இறங்கி, வெப்பமடைந்து, வறண்டு போகிறது. இந்தச் செயல்பாடு ஈரப்பதத்தைக் குறைத்து, மேகங்கள் உருவாவதை தடுக்கிறது. வறண்ட காற்றுடன் கூடிய தெளிவான வானம் நிலவுவதால், பூமியிலிருந்து வெப்பம் வேகமாக வெளியேறுகிறது.
பலவீனமான காற்று
பலவீனமான காற்று வீசும்போது, மேற்பரப்புக்கு அருகிலுள்ள குளிர்ந்த காற்று அதே இடத்தில் நிலைத்திருக்கும். இது மேலிருந்து வரும் சூடான காற்றுடன் கலப்பதைத் தடுக்கிறது. வலுவான காற்று, காற்றடுக்குகளைக் கலந்து இந்த குளிர்ச்சியைச் சீர்குலைக்கும். மேலும், வறண்ட காற்று ஈரப்பதமான காற்றை விட வேகமாக குளிர்கிறது.
ஈரப்பதம் வெப்பத்தை மேற்பரப்பிற்கு அருகில் பிடித்து வைக்கும். ஆனால், வறண்ட சூழல் வெப்பத்தை வெளியேற்றும். இதனால் பலவீனமான காற்று மற்றும் குறைவான ஈரப்பதம் இணைந்து இரவுநேரக் குளிர்ச்சியை அதிகரிக்கின்றன.
சுருக்கமாக தெளிவான வானம், உயர் அழுத்தத்தின் ஆதிக்கம், வறண்ட காற்று மற்றும் பலவீனமான காற்று ஆகியவை இணைந்து கதிர்வீச்சு குளிர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளன. இதன் விளைவாக, தமிழ்நாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் குளிர்ந்த இரவுகளை நம்மால் உணர முடிகிறது.












Click it and Unblock the Notifications