தென் மாவட்டங்களை குறி வைத்த மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழையின் தாக்கம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 63% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 213.3 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 347.5 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1171.7 மி.மீ, கோவையில் 888.0 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 106.8 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -33 சதவிகிதம் குறைவாகும். மற்ற மாவட்டங்களை விட ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
இப்படி இருக்கையில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது காலை 10 மணி வரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications