Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிங் மேக்கர் காமராஜர்.. ஏன், எதற்காக இந்த பெருமித பெயர் வந்தது தெரியுமா? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை 15.. பெருந்தலைவர், கர்ம வீரர், ஏழைப் பங்காளன் காமராஜர் பிறந்த நாள். தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் என போற்றப்பட்டவர்; பேரறிஞர் அண்ணாவால் குணாளா.. குலக்கொழுந்தே என கொண்டாடப்பட்டவர் காமராஜர்.

இளம்பிராயத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த சுதந்திரப் போராட்ட கால தலைவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் முகமாக திகழ்ந்தவர்.

Why Kamaraj (a) Kamarajar called kingmaker? What is Kamarajars K Plan?

1963-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்த காமராஜர் அந்தப் பதவியை திடீரென ராஜினாமா செய்கிறார்.. தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பக்தவச்சலம் பொறுப்பேற்கிறார்.. அன்று தமிழ்நாடு முதல்வர் காமராஜருடன் இந்திய அளவில் 6 மாநில காங்கிரஸ் அரசுகளின் முதல்வர்களும் கூட பதவியை ராஜினாமா செய்தனர். தமிழ்நாட்டில் காமராஜரின் ராஜினாமா முடிவுக்கு அப்போது தந்தை பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்படி என்ன காமராஜர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது?

கே பிளான்: காமராஜரின் இந்த ராஜினாமாவுக்கு காரணமே அவர் முன்வைத்த "K Plan" "கே பிளான்" "காமராஜர் பிளான்" என்பதுதான். இன்றைக்கும் காங்கிரஸ் கட்சியில் பிரச்சனைகள் எழுந்தால் மறக்காமல் எல்லோரும் உச்சரிப்பது இந்த "K Plan" குறித்துதான்.. தமிழ்நாடு முதல்வராக காமராஜர்.. மத்தியில் பிரதமராக ஜஹவர்லால் நேரு.. காங்கிரஸ் கட்சியில் முதுபெரும் தலைவர்கள். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் பூதாகரமாகி ஒருவித தொய்வு நிலையை நோக்கி நகர்ந்தது. 3 இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்வியையும் சந்தித்த காலம். அப்போது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு நேரு முடிவு எடுத்திருந்தார். ஆனால் நேருவின் முடிவை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஏற்கவில்லை. அப்போது காமராஜன் முன்வைத்ததுதான் கே பிளான். அதாவது மூத்த தலைவர்கள் அரசு பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணியாற்ற வேண்டும்; அரசு பதவிகளை இளைஞர் கூட்டத்துக்கு தர வேண்டும் என்பதுதான் காமராஜர் முன்வைத்த திட்டம். இத்திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் ஏற்றுக் கொண்டது. இதனை செயல்படுத்த தாமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பிற மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராஜினாமா செய்தனர். மத்திய அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்தனர். இது காங்கிரஸ் கட்சியில் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவராகவும் ஆனார் காமராஜர். ஆனால் காலத்தின் பாதை வேறானதாக இருந்தது. 1964-ம் ஆண்டு ஜஹவர்லால் நேரு காலமானார்.

கிங்மேக்கர்: ஜஹவர்லால் நேரு மறைவின் போது நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இயல்பாகவே காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, அகில இந்திய அளவில் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்ந்த காமராஜர் நினைத்திருந்தார் அந்தப் பதவியை பெற்றிருக்க முடியும். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் 1964-ல் லால் பகதூர் சாஸ்திரியை நேருவுக்குப் பின் பிரதமராக அரியணை ஏற்றினார் காமராஜார். அப்போதும் காலம் காமராஜருக்கு சோதனையைத் தான் தந்தது. 2 ஆண்டுகள்தான் லால்பக்தூர் சாஸ்திரி, பிரதமர் பதவியில் இருந்தார். 1966-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி மறைந்தார். அவருக்கு அடுத்த பிரதமர் என்ற கேள்வி அப்போதும் எழுந்தது. அப்போதும் காமராஜரை நோக்கியே அனைவரது பார்வையும் இருந்தது. அந்த தருணத்தில் பிரதமர் பதவி தம் முன்னே காத்திருந்த பொழுதில் கூட அதனைபற்றி கவலைப்படாமல் நேருவின் மகளான இந்திரா காந்தி அம்மையாரை பிரதமராக்கினார் காமராஜர். காலம் சோதனைகளை தந்தது காமராஜருக்கு என்கிறோம்.. ஆனால் அந்த சோதனையான காலங்களில் காமராஜர் எடுத்த திடமான முடிவுகள்தான் இன்றைக்கும் வரலாற்றின் பக்கங்களில் காமராஜர் ஒரு கிங் மேக்கர் என தவிர்க்கவே முடியாமல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. பின்னர் காமராஜரின் கே பிளான் கைவிடப்பட்டது. இந்திரா காந்தி எனும் ஒற்றை தலைமை முன்வைக்கப்பட காங்கிரஸ் கட்சியானது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என இரண்டாக பிளவுபட்டது.

மதவாத எதிர்ப்பும் கொலை முயற்சியும்: 1966-ம் ஆண்டு நாடு ஒரு புதிய கோஷத்தை எதிர்கொண்டது.. இன்றைய பொது சிவில் சட்ட முழக்கம் போல! அப்போது பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என இந்து சாமியார்கள் போர்க்கொடி தூக்கினர். டெல்லியில் சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் என அறிவித்தனர். இந்த மதவாத அரசியலை மிக வன்மையாக கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பினார் காமராஜர். அப்போது காமராஜர் சொன்னவார்த்தை இன்றைக்கும் மதவாதத்துக்கு எதிரான சத்திய வாக்காக இருந்து வருகிறது.. ஆம் அன்று காமராஜர் சொன்னது இதுதான்... " நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க".. இதை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலேயே பிரகடனம் செய்தார். இதனால் மதவாத கும்பல் காமராஜர் மீது கொலைவெறித்தனத்தை காட்டியது. 1966-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி டெல்லியில் பசுவதை தடை சட்டத்தை ஆதரித்து ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம், பேரணியின் பெயரால் நாடாளுமன்றமும் தாக்கப்பட்டது. நிர்வாண சாதுக்களின் கோர தாண்டவத்தால் டெல்லி வீதிகள் மரண பீதியில் உறைந்து நின்றன. டெல்லி இல்லத்தில் காமராஜர் உறங்கி கொண்டிருந்த தருணத்தில் அவரை உயிரோடு தீ வைத்து எரிக்க முயன்றது இந்த மதவாத கும்பல்.. ஆமாம் காமராஜரின் டெல்லி இல்லத்துக்குள் நுழைந்து தீ வைத்து வெறியாட்டம் போட்டது அந்த வன்முறை கும்பல். காமராஜரை உயிரோடு எரிக்கும் வெறியுடன் நுழைந்த கும்பலின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அங்கிருந்து உயிர் தப்பி வெளியேறினார் காமராஜர். இல்லையெனில் காமராஜரின் சாம்பல்தான் அன்று நமக்கு கிடைத்திருக்கும். அந்த காலத்தில் காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என ஒரு நூலை வெளியிட்டு மக்களிடையே மதவாத கும்பலின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டு பிரசாரம் செய்தார் தந்தை பெரியார் என்பதும் ஒரு சரித்திரமே!

காமராஜர் முன்வைத்த கே பிளான் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தேவையானதாக இருக்கிறது.

காமராஜர் முன்வைத்த மதவாத எதிர்ப்பு இன்றைக்கும் தேசத்துக்கு தேவையானதாக இருக்கிறது

வரலாறுதான் எவ்வளவு விசித்திரமானது!

(ஜூலை 15, காமராஜர் பிறந்த நாள்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+