இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி விட்டார்.. மார்கண்டேய கட்ஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அலகாபாத்: இந்துக்களின் மத உணர்வுக்கு எதிராக, சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு அலகாபாத் நீதிமன்றம் ஒன்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இக்லாக் என்பவர் கடந்த ஆண்டு அடித்து கொலை செய்யப்பட்டார். இதுபற்றி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பல்வேறு சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார்.
பசுவை புனிதமான விலங்கு பட்டியலில் இருந்து நீக்கவும், பல மாநிலங்களில் அமலில் இருக்கும் பசுவதை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. ஒரு குச்சியை வைத்து, பசு, மாட்டிறைச்சி குறித்து பேசுவோரை விளாச வேண்டும் என்று தோன்றுவதாகவும் பேஸ்புக்கில் அவர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அம்மாநிலத்தை சேர்ந்த ராகேஷ்நாத் பாண்டே என்ற வக்கீல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் கூடுதல் செசன்சு கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்துக்களின் மத உணர்வுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை கூறியதன் மூலம், பெரும்பாலான மக்களை கட்ஜூ புண்படுத்தி விட்டதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுச்சி ஸ்ரீவத்சவா, இது குறித்து அடுத்த மாதம் (நவம்பர்) 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மார்க்கண்டேய கட்ஜூவுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.