சாரதா நிறுவனத்தின் ரூ.28 கோடியை ஏப்பம் விட்டு உள்துறை செயலாளர் பதவிக்கு வேட்டு வைத்த மாதங் சிங்!
டெல்லி: சாரதா நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ28 கோடியை 'கபளீகரம்' செய்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதங் சிங்கை கைது செய்ய விடாமல் சி.பி.ஐ. அதிகாரிகளை தடுத்தததால் உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமியின் பதவி பறிபோனது.
சாரதா நிதி நிறுவன மோசடியானது எத்தனையோ திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது நாட்டின் உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமியை அதிரடியாகவும் நீக்கம் செய்திருக்கிறது..
பல லட்சக்கணக்கான மக்களிடம் பணம் வசூலித்துவிட்டு அதில் ஒரு பைசா கூட அந்த அப்பாவிகளுக்கு திருப்பித்தரவில்லை சாரதா நிதி நிறுவனம்.. அத்தனை பணத்தையும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் ஏப்பம் விட்டிருக்கின்றனர். சாரதா நிதி நிறுவன விவகாரம் விஸ்வரூபமெடுக்க சி.பி.ஐ. பிடியில் பல பிரபலங்கள் சிக்கி சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
மாதங் சிங்..
இந்த பட்டியலில் கடைசியாக இணைந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் மாதங் சிங். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யவிடாமல் தடுத்ததாலேயே தற்போது அனில் கோஸ்வாமி, உள்துறை செயலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கைது செய்வார்களோ?
சி.பி.ஐ. அதிகாரிகளால் மாதங் சிங் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரிக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் பெயரை சி.பி.ஐ.வசம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு வருவதற்கு முன்பாக மாதங் சிங் பல உயர் அதிகாரிகளிடம் பேசி தம்மை கைது செய்துவிடாமல் இருக்க உதவுமாறு கேட்டிருக்கிறார்.
அனில் கோஸ்வாமி நீக்கம்..
இருப்பினும் உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமியிடம் மாதங் சிங் நேரடியாக பேசினாரா என்பது உறுதிப்படப்படவில்லை. இந்த நிலையில்தான் அனில் கோஸ்வாமியை பிரதமர் அலுவலகம் நேரில் வரவழைத்து விசாரித்தது. அனில் கோஸ்வாமியும் மாதங் சிங்கை கைது செய்ய வேண்டாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தாம் கூறியதை ஒப்புக் கொண்டும் இருக்கிறார். முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் அனில் கொஓஸ்வாமியை அழைத்து விசாரித்தார். அப்போதும் தாம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினேன் என்று அனில் கோஸ்வாமி கூறியிருக்கிறார். இதனையடுத்தே அனில் கோஸ்வாமி நீக்கப்பட்டுள்ளார்.
3வது அதிகாரி கோஸ்வாமி
மோடி தலைமையிலான மத்திய அரசில் ஓய்வு பெறுவதற்கு முன்பு பதவியில் இருந்து நீக்கப்பட்ட 3வது உயர் அதிகாரி அனில் கோஸ்வாமி.
டி.ஆர்.டி.ஓ. தலைவர்
அண்மையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓவின் தலைவராக இருந்த ஏவுகணை விஞ்ஞானி அவினாஸ் சந்தர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
சுஜாதாசிங்
அவரைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சுஜாதா சிங் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். சுஜாதாசிங் ஓய்வு பெற 7 மாதங்கள் இருந்த நிலையில் நீக்கப்பட்டார்.
ஓட்டைவிட்ட மனிதர்கள்..
தற்போது அனில் கோஸ்வாமி நீக்கப்பட்டுள்ளார். அனில் கோஸ்வாமி நீக்கத்துக்கு காரணமான மாதங் சிங், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கியமான குற்றவாளி என்கிறது சி.பி.ஐ. மேலும் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் சாரதா நிதி நிறுவன விவகாரத்தில் ஆதாயம் அடைந்த கையோடு பல 'ஓட்டைகளையும்' விட்டு சென்றிருப்பதுதான் மிகவும் சாதகமாக இருக்கிறது என்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.
கைதில் இருந்து தப்பிக்க முயற்சி
மாதங் சிங்கைப் பொறுத்தவரையில் தாம் உடனடியாக கைது செய்யப்படுவிடமாட்டோம் என்றே கருதியும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். ஆனால் விசாரணையின் போக்கில் கைது செய்யப்பட்டுவிடுவோம் என்று தெரிந்த நிலையில் அந்த கைதில் இருந்து தப்பிக்கவும் முயற்சிக்கவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் சி.பி.ஐ. அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடவும் மாதங் சிங் முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கின்றனர். அப்போது தமக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் மாதங் சிங்.
ரூ28 கோடி ஏப்பம்
சாரதா நிதி நிறுவன தலைவரான சுதீப்தா சென், சி.பி.ஐ.க்கு முன்னர் எழுதிய கடிதத்தில், மாதங் சிங்குக்கு அவரது 'நார்த் ஈஸ்ட் பங்களா' தொலைக்காட்சியை வாங்குவதற்கு ரூ28 கோடி கொடுத்ததாக கூறியிருந்தார். அதே நேரத்தில் மாதங் சிங் இந்த பணத்தை திருப்பியும் தரவில்லை.. தொலைக்காட்சி விற்பனை தொடர்பான 'டீலும்' முடியவில்லை என்று கூறியிருந்தார். இதுதான் மாதங் சிங் சிக்கியதன் பின்னணியாகும்.
மிரட்டும் மேற்கு வங்கம்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் மேற்கு வங்க அரசும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் குறுக்கீடு செய்வதாக சி.பி.ஐ. அடிக்கடி புகாரும் கூறி வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த விசாரணை நடைபெறுவதால் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூட உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திணறும் சி.பி.ஐ.
குறிப்பாக மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்ட போது சி.பி.ஐ. அதிகாரிகள் மிரட்டலுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது. மதன் மித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் குவிந்ததால் சி.பி.ஐ. ரொம்பவும் திணறியும் போனது. இதனால் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை மேற்கு வங்கத்தை விட்டு வேறு மாநிலத்தில் நடத்துவதற்கு அனுமதி கோரியிருக்கிறது சி.பி.ஐ என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் காங்கிரஸில் இருந்து சிரின்ஜோய் விலகல்
இதனிடையே சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கி சிறைபட்ட திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி சிரின்ஜோய் போஸ் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். தமது எம்.பி. பதவியையும் ராஜினமா செய்துள்ளார்
ஏற்கனவே இதே வழக்கில் சிறையில் இருக்கும் குணால் கோஷை கட்சியை விட்டே திரிணாமுல் காங்கிரஸ் நீக்கியிருந்தது. தற்போது சிரின்ஜோய் போஸ் விலகியிருப்பது திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.