ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கியது மன்னார்குடி கோஷ்டி?
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடித்தை ஓ பன்னீர்செல்வம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் சசிகலாவிடம் தம்முடைய ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் கொடுத்தாராம்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை நெருக்கடி கொடுத்து வாங்கிவிட்டது மன்னார்குடி கோஷ்டி என்கிறது அதிமுக வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தாமே முதல்வராக விரும்பினார் சசிகலா. ஆனால் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு அமைச்சரவையில் 2-வது இடத்தில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது.
பொதுச்செயலர் பதவி
இதை சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டியால் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக 25 நாட்கள் நாடகத்தை அரங்கேற்றி அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றினார் சசிகலா.
கலகக் குரல்
அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றிய உடனேயே மீண்டும் முதல்வர் பதவிக்கு குறிவைத்தது மன்னார்குடி கோஷ்டி. அமைச்சர்கள் மூலமாக போர்க்கொடி தூக்க வைத்தனர். உச்சகட்டமாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பன்னீர்செல்வத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்.
ராஜினாமா கடிதம்
நிலைமை மிகமோசமான நிலையில் எந்த காரணத்தை முன்னிட்டும் ராஜினாமா செய்ய வேண்டாம் என மத்திய அரசு ஓ பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தல் விடுத்தது. ஆனால் போயஸ் கார்டனில் நேற்று நடைபெற்ற ஆலோசனைகளின் போது பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டதாம் மன்னார்குடி கோஷ்டி.
ஜனவரி 10 அல்லது 12-ல் பதவியேற்பு
நாளை முதல் மாவட்ட வாரியான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை என்ற நாடகம் நடைபெற உள்ளது. வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது இந்த நாடகம். இதற்குப் பின்னர் ஜனவரி 10 அல்லது 12-ந் தேதியன்று சசிகலா முதல்வராக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றன அதிமுக வட்டாரங்கள்.