ரூ.570 கோடி விவகாரம்... மத்திய அரசின் நடவடிக்கை என்ன?... பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின் போது திருப்பூரில் ரூ.570 கோடி சிக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாட்டைப் பொருத்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே உரிய ஆவணங்களின்றி 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். மேலும், தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதன் பின்னர் இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.