சமந்தா- நாக சைதன்யா விவாகரத்துக்கு கேடிஆர் காரணம்? அப்பா நாகார்ஜுனாவுக்கு வந்ததே கோபம்! பறந்த புகார்
ஹைதராபாத்: நடிகை சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா கூறிய கருத்துகள் சர்ச்சையாக மாறியுள்ளது. அவரது பேச்சுக்கு சமந்தா கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல அமைச்சர் சுரேகாவும் தனது பேச்சுக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இருப்பினும், இந்த பிரச்சினை ஓய்வதாகத் தெரியவில்லை. சுரேகா வேண்டுமென்றே பொய்யான கருத்துகளைப் பரப்புவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரபல நடிகர் நாகார்ஜுனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தெலுங்கானாவில் இப்போது ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அங்கு வனத்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறை அமைச்சராக சுரேகா இருக்கிறார்.

சமந்தா- நாக சைதன்யா விவாகத்து குறித்து இந்த சுரேகா சொன்ன கருத்துகளே கடந்த இரண்டு நாட்களாகத் தெலுங்கானாவில் மிகப் பெரிய பேசுபொருளாக வெடித்துள்ளது.
சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து: அதாவது நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருப்பினும், இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீட்டித்தது. கடந்த 2021இல் இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தாக அப்போது இருவரும் அறிக்கை வெளியிட்டனர்.
இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சுரேகா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது சமந்தாவின் விவாகரத்துக்கு பிஆர்எஸ் செயல் தலைவரும் முன்னாள் முதல்வரான கேசிஆரின் மகனுமான கே.டி.ராமராவ் தான் காரணம் என்று அவர் கூறியிருந்தார். இத்தோடு வேறு சில சர்ச்சை கருத்துகளையும் அவர் கூறியிருந்தார்.
வருத்தம் தெரிவித்த அமைச்சர் சுரேகா: இதுவே இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. அமைச்சரின் இந்த கருத்துக்கு நடிகை சமந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சரே சுரேகாவே தனது கருத்துத்து வருத்தம் தெரிவித்தார். அதேநேரம் கேடிஆர் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மை என்றும் அதை வாபஸ் பெற முடியாது என்றும் கூறியிருந்தார்.
இது தெலுங்கானாவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தனது மகனின் விவாகரத்து குறித்து தெலுங்கானா சுற்றுச்சூழல் அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரபல நடிகர் நாக சைதன்யாவின் தந்தையும் தெலுங்கு சினிமா சூப்பர்ஸ்டாருமான நாகார்ஜுனா வழக்கு தொடர்ந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீசிமன்றத்தில் இது தொடர்பாக நாகார்ஜுனா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாகார்ஜுனா புகார்: நடிகர் நாகார்ஜுனா சார்பில் தொடரப்பட்ட அந்த வழக்கில், "தான் சொல்லும் தகவல் பொய்யானது என்பதை உணர்ந்தே அவர் (அமைச்சர் சுரேகா) இந்த கருத்தைக் கூறியிருக்கிறார். எங்கள் தொழில் வாழ்க்கையைப் பாதிக்கவும் மற்றும் குடும்ப நற்பெயரைச் சேதப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே கூறியிருக்கிறார்.
அரசியல் ஆதாயம் மற்றும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தலும் குடும்ப நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில், பொய்யான தகவல்களைப் பரப்பும் நோக்கத்துடன் இந்த தகவல்களை கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு கிரிமினல் குற்றம். அவரது பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications