கட்டிப்போட்டு.. மாற்றுத்திறனாளி கையை 3 ஆக உடைத்து.. மனம் இளகியவர்கள் இதை படிக்க வேண்டாம்!
சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில்.. அஜித்குமார் என்ற கோவில் காவலாளி மரணம் அடைந்தார். போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த அவரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்தித்தார். அதோடு திமுக அரசை மிக கடுமையாக தாக்கி இருந்தார். அப்படிப்பட்ட விஜய் ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் தமிழ்நாட்டையே உலுக்கும் மாபெரும்.. மிக மோசமான கஸ்டடி மரணம் ஒன்று நிகழ்ந்து இருக்கிறது.. கேட்க கேட்க கண்ணீர் விட வைக்கும் அளவிற்கு கொடூரம் இந்த கஸ்டடி மரணத்தில் நிகழ்ந்து இருக்கிறது!
திமுக ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் நடந்தால் துடித்தெழுந்து அறிக்கை வெளியிட்டீர்கள்.. அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் நடந்தபோது நீதிக்காகக் குரல் கொடுத்தீர்கள்.. இன்று ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கும்போது, அதே ரத்தக்கறை படிந்த காவல் மரணம் உங்கள் ஆட்சியிலும் தொடர்வது ஏன்?

தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் நெஞ்சைக் குடையும் தார்மீகக் கேள்வி இது! தமிழ்நாட்டையே உலுக்கும் அப்படி ஒரு கொடூரம்தான் குமரி மாவட்டத்தில் நடந்து உள்ளது!
கன்னியாகுமரி லாக் அப் டெத்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டச் சேர்ந்த 35 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் லாக்-அப் மரணம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் நடந்த காவல் துறை அத்துமீறல்களுக்கும், லாக் அப் மரணங்களுக்கும் தற்போதைய தவெக ஆட்சியில் நடப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்ற மக்களின் வேதனை கலந்த கோபமான குரல் கோட்டையை நோக்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
பெட்டிக்கடையில் புகுந்த அதிகாரம்
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர், தள்ளாடும் கால்களுடனும், வளைந்த கைகளுடனும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சிறிய பெட்டிக்கடையை நடத்தி வந்தார்.
வயதான பெற்றோர், மனைவி ஆனந்தவள்ளி, 4 வயது மகன் வினு வர்மன் என அந்த எளிய குடும்பத்தின் ஒரே வாழ்வாதார நம்பிக்கை அவர்தான்.
கடந்த ஜூலை 9-ம் தேதி, தடை செய்யப்பட்ட 200 கிராம் குட்கா புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி தென்தாமரைகுளம் காவல்துறையினர் இவரைக் கைது செய்தனர். அதாவது இவரின் கடையில் குட்கா விற்றதாக புகார்.
இப்படிப்பட்ட குற்றத்திற்கு என்ன தண்டனை? போலீஸ் கைது.. மெடிக்கல் டெஸ்ட்.. மாஜிஸ்டிரேட்டிடம் ஆஜர்.. ரிமாண்ட் அல்லது பெயில்.. இதுதான் முறை! ஆனால் இங்கே நடந்ததே வேறு!
இந்த கைதின் பின்னணியில் இருக்கும் கொடூரம் சபரிவர்மனின் மனைவி அளித்த புகார் மனுவில் அம்பலமாகியுள்ளது. சபரிவர்மனிடம் காவல்துறையினர் லஞ்சமாக 25,000 ரூபாய் கேட்டதாகவும், அந்த ஏழையால் அவ்வளவு பெரிய தொகையைத் தர முடியாததால் ஆத்திரமடைந்து அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்ததாகவும் அவரது மனைவி கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார்.
மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் கோரத் தாண்டவம்!
சிறைத்துறை அதிகாரிகள் தொடக்கத்தில் இந்த மரணத்தை மாரடைப்பு என்றும், திடீர் உடல்நலக் குறைவு என்றும் கூறி வழக்கம் போல மூடி மறைக்கவே முயன்றனர். ஆனால், மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த உடற்கூராய்வு சோதனை, நாகர்கோவில் கிளைச் சிறைக்குள் நடந்த கொடூரமான மனித வேட்டையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் மிகக் கொடூரமான காயங்கள் இருந்தன! மாற்றுத்திறனாளியான அவரது கைகள் மற்றும் கால்களைக் கயிற்றால் இறுகக் கட்டிப்போட்டு, மிருகத் தனமாகத் தாக்கியுள்ளனர்.
நெஞ்சைப் பிளக்கும் கொடூரம்
ஏற்கனவே ஊனமுற்று பலவீனமாக இருந்த அவரது வலது கையை, சிறைக் காவலர்கள் அடித்துத் துண்டு துண்டாக உடைத்துள்ளனர்! அவரது தலை, நெஞ்சு, கழுத்தின் பின்பகுதி என உடலின் எந்த ஒரு பாகத்தையும் விட்டுவைக்காமல் பூட்ஸ் கால்களாலும், லத்திகளாலும் அடியோடு துவம்சம் செய்துள்ளனர்.
மதுப் பழக்கம் உடையவர், சிறைக்குள் அப்நார்மலாக நடந்துகொண்டார் என்ற மொட்டையான காரணத்தைக் கூறி, தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவுடை நம்பி சுரேஷ் ஆகியோர் சில கைதிகளின் உதவியோடு சபரிவர்மனை அடித்துக் கொலை செய்துள்ளனர். என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தக் கூடத் திராணியற்ற ஒரு மாற்றுத்திறனாளி இளைஞனின் உடலை, அதிகாரம் படைத்தவர்கள் சிதைத்துத் தள்ளிய விதம் எப்படிப்பட்ட கொடூரமான மனநிலை?
திமுக, அதிமுக பாணி.. தவெக ஆட்சியிலும் மாறாத அவலம்!
தமிழக மக்கள் ஒவ்வொரு தேர்தல் போதும் ஒரு மாற்றத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், ஆட்சிப் அதிகாரத்தில் அமர்பவர்களின் முகங்கள் மாறுகிறதே தவிர, காவல்துறையின் லத்தி அடியும், அப்பாவி ஏழைகளின் மரணங்களும் மாறுவதே இல்லை.
முன்பு அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலை ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. அடுத்து வந்த திமுக ஆட்சியில் விக்னேஷ், அஜித் குமார் எனப் பல லாக்-அப் மரணங்கள் தொடர்ந்தன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு சட்டம்-ஒழுங்கைக் கேள்வி கேட்ட இன்றைய விஜய், இப்போது அதிகாரத்திற்கு வந்த சில மாதங்களிலேயே அதே தவற்றைத் தன் கண் முன்னால் அரங்கேற்ற அனுமதித்திருப்பது எந்த வகையில் நியாயம்?
காவல்துறையைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜய் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஆட்சிகள் மாறினாலும், காவல் துறையின் இந்த மிருகத்தனமான குணம் மாறவே மாறாதா? பாதுகாப்பான, அமைதியான அரசைத் தருவோம் என்று முழங்கி ஆட்சிக்கு வந்த தவெகவும் முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளின் அதே பாணியைத்தான் பின்தொடர்கிறதா என்ற கடுமையான விவாதம் இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜெயிலில் அந்த மாற்றுத்திறனாளி எழுப்பிய மரண ஓலம் influencer-கள் விசில் சத்தத்தில் உங்களுக்கு கேட்காமல் போய்விட்டதா சி.எம் சார்?












Click it and Unblock the Notifications