விவசாய கடன் ரூ. 60,000 கோடி தள்ளுபடி
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 60,000 கோடி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
2008-09ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார்.
அதில், 1 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் நடுத்தர விவசாயிகளின் கடன்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டு்ள்ளன.
இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 4 கோடி விவசாயிகள் பலனடைவார்கள்.
இதனால் வங்கிகள் வழங்கிய ரூ. 60,000 கோடி கடன் தள்ளுபடியாகிறது.
இந்த கடன் தள்ளுபடியால் ஏற்படும் நஷ்டத்தை வங்கிகளுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் ஈடு கட்டும்.
இந்த விவசாயிகள் தவிர மற்ற விவசாயிகள் நிலுவையில் வைத்துள்ள வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த புதிய திட்டத்தை (one time settlement) மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
25 சதவீத தள்ளுபடியுயடன் இந்தக் கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்த வகை செய்யப்படும்.
வங்கிகள் வழங்கியுள்ள மொத்த கடனில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகை 4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை ப.சிதம்பரம் அறிவித்தபோது பாஜக, மற்றும் 3வது அணி எம்பிக்கள் அமளியில் இறங்கினர். பதிலுக்கு ஆளும் கூட்டணிக் கட்சியினரும் குரல் எழுப்பவே சிறிது நேரம் பட்ஜெட் தாக்கல் தடைபட்டது.
விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பால் நாட்டின் மிகப் பெரிய ஓட்டு வங்கியை காங்கிரஸ் வளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் செய்தது போலவே விவசாயக் கடன்களை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இந்தாண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.2,80,000 கோடியை ஒதுக்கியுள்ளார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications