சிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது?
Recommended Video

ஈரோடு: பவானிசாகர் அணையில் 8 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையிலிருந்து வழக்கமாக ஆகஸ்டு முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி அணையின் நீர்மட்டம் 97.86 அடியாகவும், நீர் இருப்பு 27 டிஎம்சி யாகவும் இருந்தது. இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 62.38 அடியாகவும் நீர் இருப்பு 8.1 டிஎம்சி யாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதியே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நீர் இருப்பு குறைவின் காரணமாக பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அணைக்கு நீர் வரத்து 1,277 கன அடியாக இருக்கும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி வாய்க்கால் 2 ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications