சிங்கூர் மக்களின் நீண்ட போராட்டத்திற்கு வெற்றி... நிலங்களை ஒப்படைக்க ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: சிங்கூர் விவசாயிகளிடம் இருந்து மேற்கு வங்க அரசு டாடா தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலத்தை அவர்களிடமே திரும்பி கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்த விவசாய மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

நிலத்தை கையகப்படுத்தியதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும் விவசாயிகள் திரும்பக் கொடுக்கத் தேவையில்லை என்றும், சிங்கூர் நிலம் விவசாயிகளிடம் இருந்து சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மேற்குவங்கத்தில் உள்ள சிங்கூர் மாவட்டத்தில் டாடா நானோ கார் தொழிற்சாலையை அமைக்க, 1000 ஏக்கர் விவசாய நிலத்தை அம்மாநில அரசு கையகப்படுத்தி டாடா நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இதனை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர்களும், விவசாய மக்களும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதனை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடுத்தனர். ஆனால் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உடைந்து போன விவசாய மக்கள் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிபதிகள் வி.கோபால கவுடா, அருண் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
"மேற்குவங்க அரசு சிங்கூரில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதற்கான ஆய்வுகளை 10 வாரங்களுக்குள் மாநில அரசு செய்து முடித்து 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இத்தனை ஆண்டுகளாக இழந்துள்ளதால் அவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த இழப்பீட்டுத் தொகையை திரும்பித் தர தேவையில்லை" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து சிங்கூர் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அம்மாநிலத்தை ஆண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு போராட்டக்காரர்களை கடுமையாக ஒடுக்கியது. இந்த சம்பவமே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications