வறட்சி - காவிரி மாவட்ட அதிகாரிகளுடன் வீரபாண்டி ஆறுமுகம் ஆலோசனை
சென்னை: தென் மேற்குப் பருவ மழை பொய்த்துள்ளதால் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களின் விவசாயத்துறை அதிகாரிகளுன் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் க.நந்தகிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
பருவமழை பொய்த்ததால் காவிரி பாசன பகுதியில் காரீப் பருவத்தில் இயல்பான சாகுபடி பரப்பான 1.40 லட்சம் ஹெக்டேருக்கு மாறாக 79,800 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி பாசனப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை பாதுகாக்கவும், சம்பா பருவத்தினை உரிய காலத்தில் மேற்கொள்ளவும் 28.7.2009-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
இது தொடர்பாக, 24.8.2009-ல், வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை ஆணையர், தோட்டக்கலை இயக்குநர், வேளாண்மை விற்பனைத் துறை ஆணையர், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர், விதைச்சான்றுத் துறை இயக்குநர் மற்றும் சிறப்புச் செயலாளர், பொதுப்பணித்துறை ஆகிய உயர் அலுவலர்களுடன் சேலத்திலிருந்து புறப்பட்டு, கல்லணை மற்றும் காவிரி ஆற்றின் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பார்வையிடுகிறார்.
பின்னர், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பாதுகாப்பது குறித்தும், சாகுபடி செய்யப்படாத பரப்பில் சம்பா சாகுபடியை முன்னதாகவே தொடங்குவது குறித்தும் டெல்டா மாவட்டங்களின் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், வேளாண்மைத்துறை அமைச்சரின் தலைமையில் தஞ்சாவூரில் ஆகஸ்டு 24-ந் தேதி மாலை 5.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
மறுநாள் 25-ந்தேதியன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பார்வையிடவும், சம்பா சாகுபடிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு, இன்னும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளின் கருத்துக்களை அறியவும், வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கவும் வேளாண் அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.