விவசாயிகள் முன்னேற விஞ்ஞானிகள் ஏணியாக செயல்பட வேண்டும்: கருணாநிதி பேச்சு
கோவை: விவசாய சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு விஞ்ஞானிகள் ஏணியாக செயல்பட வேண்டும் என்று கோவை வேளாண் அறிவியல் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
கோவை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேளாண் அறிவியல் மையங்களின் 4வது தேசிய அறிவியல் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில்,
இந்தியாவில் விவசாய மேம்பாட்டில் தமிழகம் இதுவரை முன்னோடியாக திகழ்ந்துகொண்டு இருக்கிறது. வேளாண் அறிவியல் நிலையங்களின் முக்கிய செயல்பாடுகள் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, தரத்தை மேம்படுத்துவது, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச்செய்வது, விவசாய சமுதாயத்தின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவை ஆகும்.
இவற்றை நிறைவேற்றுவதற்கு வேளாண் அறிவியல் நிலையங்கள் விவசாயிகளுக்கு போதிய அறிவை புகுத்தவேண்டும். கள விளக்க பயிற்சிகள், பண்ணை பயிற்சிகள், கண்காட்சிகள், தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பயிற்சிகள் அளிக்கவேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கிராமப்புற விவசாயிகளுக்கு கொண்டு செல்வதில் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்கள் விவசாய குடிமக்கள். அவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏணிகளாக விஞ்ஞானிகள் செயல்படவேண்டும்.
விவசாய தொழிலாளர்கள் நகர்ப்புறங்களை நாடிச் செல்வதால் வேளாண் சாகுபடி பரப்பளவு சுருங்கி உள்ளது. இந்த சூழலில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
உலக அளவில் நம் நாட்டின் விவசாயம் நல்ல நிலையில் உள்ளது. நம் நாடு கரும்பு உற்பத்தியில் 2வது இடத்திலும், அரிசி, கோதுமை உற்பத்தியில் 2வது இடத்திலும், பருப்பு உற்பத்தியில் முதலிடத்திலும், எண்ணெய் வித்து உற்பத்தியில் 3வது இடத்திலும், காய்கறி, பழங்கள் உற்பத்தியில் 2வது இடத்திலும் உள்ளது என்றார் முதல்வர்.
முன்னதாக, மாநாட்டை மத்திய விவசாய துறை அமைச்சர் சரத்பவார் தொடங்கிவைத்து பேசினார்.
நாட்டில் இந்திய அளவிலான வேளாண் அறிவியல் மையங்களை சேர்ந்த 600 விஞ்ஞானிகளும், விவசாய பல்கலைக்கழகங்களை சேர்ந்த 400 விஞ்ஞானிகளும், 200 இளம் விஞ்ஞானிகளும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications