ஆளுமை இல்லை.. இஸ்மாயில், ஆறுமுகம், பூலாவாரி சுகுமாரன் போல நானும் தியாகியாக வேண்டும்: ஈபிஎஸ் உருக்கம்
சென்னை: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஆளுமை உள்ளவன் நான் அல்ல.. அதிமுகவின் தியாகிகளான உடுமலைப்பேட்டை இஸ்மாயில், வத்தலக்குண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாரன் என நீளும் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெற வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உருக்கமாக பேசினார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது
மிகவும் சோதனையான கால கட்டத்தில் என்னை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தீர்கள். இந்த ஆட்சி நிலைக்காதென்று பலரும் நினைத்தார்கள். நம்மை அப்புறப்படுத்தி அரியணையில் ஏற நாள் பார்த்தவர்கள் நம்முடைய எதிரிகள். தீபாவளிக்குள் போய் விடுமா? பொங்கலுக்குள் போய் விடுமா? பொய்யாய், கனவாய் போய்ச் சேர்ந்து விடும் என்ற கனவெல்லாம் பலரும் கணக்கு போட்டுக் கொண்டிருந்த காலத்தில் உங்கள் ஆதரவோடும், கடவுளின் அருளாசியோடும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அருளாசியோடும் கடந்து வந்து வெற்றிகரமாக இந்த சட்டமன்றத்தின் நிறைவையும், அடுத்து நமது ஆட்சியே என்ற நம்பிக்கையோடும் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

நான் எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த ஒரு எளிய மனிதர். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா போன்ற ஆளுமை உள்ளவன் அல்ல. இருப்பினும், கழகம் என்னிடம் ஒப்படைத்த கடமையை சரியாக செய்து முடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் உங்கள் அன்பு, நீங்கள் வழங்கிய முழு ஒத்துழைப்பு. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை நினைக்கும்போது என் நெஞ்சுக்கு நிம்மதி ஏற்படுகிறது. இதுவரை எவ்வாறு கடமையாற்றினேனோ அதைவிட சிறப்பாக இனி வருங்காலங்களிலும் தமிழ்நாட்டிற்கும் கழகத்திற்கும் தொண்டாற்றுவேன். கடந்த 4 ஆண்டுகளில் நான் பெற்றிருக்கும் அனுபவத்தைக் கொண்டு என்னால் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியுமென்று நம்புகிறேன்.
என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்ததால் எப்படி கழகத்தின் சிறப்பு அதிகரித்ததோ, மக்கள் மத்தியில் நம்முடைய செல்வாக்கு, நம்முடைய உழைப்பாலும், மக்கள் நலப்பணிகளையும் வளர்த்தோமோ அதைப்போலவே நம்முடைய அடுத்த ஆட்சியும் கழகத்தை இன்னும் 100 ஆண்டுகளுக்கு ஆட்சியை நிலைநிறுத்த அடித்தளமிடும் என்பதை உறுதியாக உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இனி, கழக உடன்பிறப்புகளுக்கு பொற்காலம் தான். கழகத்திலிருக்கும் பல்வேறு தொண்டர்களுக்கு இதுநாள் வரை செய்திட முடியாத கடமைகள் அனைத்தையும் அடுத்த ஆட்சியில் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் நாம் வெற்றியை அடைய முடியும் என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நம் எதிரிகளுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
நீங்கள் (திமுக) எங்களை எதிர்த்து என்னென்னவோ தந்திரங்களை செய்தீர்கள். தோல்வி அடைந்திருக்கும் எதிரிகளே, துரோகிகளே, ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கழகம் என்பது ஏழை, எளிய உழைக்கும் வர்க்க மக்களுக்காக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம். இந்த இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டுக்கோப்பாக உருவாக்கப்பட்ட போர்ப்படை. தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாற்றி நம் உரிமைகளை பாதுகாத்து உலகத்தின் சிறந்த இனமாக தமிழர்களை உருவாக்கிட தோற்றுவிக்கப்பட்ட, பயிற்றுவிக்கப்பட்ட வெற்றிப்படை கழகம்.
உடுமலைப்பேட்டை இஸ்மாயில், வத்தலக்குண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாரன் என்று தியாகிகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். அந்தப் பட்டியலில் தன்னுடைய பெயரும் இடம்பெறுவதையே தான் பெற்ற பேராகக் கருதும் இயக்கம் தான் கழகம். தந்திரத்தாலும் சூழ்ச்சியாலும் மறைந்திருந்து தாக்கும் கோழைச் செயல்களாலும் மாச்சர்யங்களை உருவாக்கி நல்லது செய்துவிடலாமென்ற பொய்க் கணக்குகளாலோ எங்களை வீழ்த்தி விட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றி எங்கள் சொந்தம், வீரம் எங்கள் சொத்து. கழக உடன்பிறப்புகளே, கழக முன்னோடிகளே மீண்டும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தி சாதனை படைத்த அரசு. இதுவரை எந்தத் தலைவருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா எடுத்த சரித்திரம் கிடையாது. அந்த சரித்திரத்தை, நம்முடைய தலைவருக்கு நம்முடைய அரசு நன்றிக் கடனாக செலுத்தியது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் பிரம்மாண்டமான வளைவு ஒன்றையும் கட்டி பெருமை சேர்த்துள்ளோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர் உருவாக்கிய இயக்கத்தை, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீண்டும் கழக இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த ஒப்பற்ற தியாகச் சுடர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, மெரினா கடற்கரையில், பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதியிலேயே அம்மா அவர்களை நல்லடக்கம் செய்து ஏறத்தாழ 80 கோடி மதிப்பீட்டில் சிறப்பான ஆலயம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் ஒரு மாதத்தில் திறக்கவிருக்கிறோம். அந்த ஆலையத்தைத் திறக்கும்போது தமிழகத்திலுள்ள கழகத்தினர் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கு பெற வேண்டும், அதுதான் அம்மா அவர்களுக்கு நாம் செலுத்துகிற நன்றி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் சாதாரணத் தொண்டன்கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியுமென்று நம்மையெல்லாம் உருவாக்கி அழகு பார்த்த தலைவர்களுக்கு நாம் எடுக்கின்ற விழா. அதேபோல, இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லத்தை அம்மா அவர்களின் நினைவிடமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications