அடுத்தடுத்து மிஸ்டேக் செய்த இன்போசிஸ்.. ஏஐ வைத்து பில்டப் மட்டும் கொடுக்கிறதா?
இன்போசிஸ் நிறுவனம் தன்னை "ஏஐ-முதல்" (AI-First) நிறுவனம் என்று அறிவித்தாலும், 2025-26 நிதியாண்டு முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. இன்போசிஸ் காலாண்டு முடிவில் 3 முக்கியமான விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என ராகுல் மாதூர் தெரிவித்துள்ளார்.
ஊழியர் எண்ணிக்கை அடிப்படையிலான சராசரி வருவாய் ஒருவருக்கு 0.8 சதவீதம் குறைந்துள்ளது. நான்காவது காலாண்டில் 8440 பணியாளர்களை குறைத்தும், முழு ஆண்டில் நிகர 11,300 பணியாளர்களை அதிகரித்துள்ளது. AI பிரிவு வருவாயை மார்ச் காலாண்டு முடிவுகளில் வெளிப்படையா அறிவிக்காதது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்துள்ளதாக ஐடி துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரஷ்ஷர்ஸ் நியமித்தது தோல்வியில் முடிந்தது
2025-26 நிதியாண்டில் 20,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்துவதாக இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பாரேக் ஜனவரியில் டாவோஸில் அறிவித்தார். ஆனால் உண்மையில் 18,000 புதியவர்களை பணியமர்த்திய பிறகு, நான்காவது காலாண்டில் மட்டும் 8,440 பேரை வேலையை விட்டு நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு நேர்மாறாக டிசிஎஸ் (TCS) தலைமை நிர்வாக அதிகாரி "ப்ரோகிராமர்கள் தேவை குறையும்" என்று கூறிய அதே நேரத்தில், இன்போசிஸ் புதியவர்கள் பணியமர்த்தலில் பந்தயம் கட்டியது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உற்பத்தித்திறன் குறைவு - ஏஐ பலன் இல்லை
நிலையான நாணய அடிப்படையில் ஊழியர் ஒருவருக்கு வருவாய் 0.8 சதவீதம் குறைந்துள்ளது. பிரஷ்ஷர்களுக்கு பயிற்சியில் இருப்பதை கணக்கில் கொண்டு வருவாய் அளவீட்டை சரிசெய்து பார்த்தாலும் 0.4 சதவீதம் குறைவு தான். அதே காலகட்டத்தில் டிசிஎஸ் 1.5 சதவீதம் உயர்வை பதிவு செய்துள்ளது. ஏஐ மூலம் உற்பத்தித்திறன் அதிகரிப்பு என்று சொன்னாலும், இன்போசிஸ் முடிவுகளில் அதற்கான அறிகுறி இல்லை என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏஐ-யில் வெறும் பேச்சு மட்டுமா?
கடந்த காலாண்டில் ஏஐ வருவாய் 5.5 சதவீதம் என்று இன்போசிஸ் தெரிவித்திருந்த நிலையில், இந்த காலாண்டு முடிவுகளில் ஏஐ பிரிவு வருவாய் குறித்த தரவுகளை வெளியிடவே இல்லை. அதேசமயம் டிசிஎஸ் தனது ஏஐ ஒப்பந்தங்கள் மூலம் 7.5 சதவீத வருவாயை (2.3 பில்லியன் டாலர்) பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்போசிஸ் தொடர்ந்து ஓப்பன் ஏஐ, ஆன்த்ரோபிக் போன்ற நிறுவனங்களுடன் இணைந்ததை பெரிய அளவில் விளம்பரம் செய்தது. ஆனால் டிசிஎஸ் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் டேட்டா சென்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நம்பிக்கை அளிக்கும் சில அம்சங்கள்
இந்த முடிவுகளிலும் சில நல்ல செய்திகள் உள்ளன. 2026ஆம் நிதியாண்யில் நிலையான நாணய அடிப்படையில் 3.1 சதவீத வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளது. இது டிசிஎஸ் (-2.4%) மற்றும் விப்ரோ (மூன்றாவது ஆண்டாக மைன்ஸ் அளவீடு) ஆகியவற்றை விட சிறப்பானது. EBIT மார்ஜின் 21 சதவீதத்தில் நிலையாக பராமரிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வெளியேற்ற விகிதம் (அட்ரிஷன்) 12.6 சதவீதத்தில் உள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் தொடர்ந்து "ஏஐ-ஃபர்ஸ்ட்" நிறுவனம் என்று சொன்னாலும், Q4 FY26 முடிவுகள் அதற்கு நேர்மாறான நிலையை தான் கொடுக்கின்றன. இந்த முடிவுகள் இன்போசிஸ் நிர்வாகத்துக்கு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த காலாண்டுகளில் ஏஐ உண்மையான வளர்ச்சியை தருமா என்பதை சந்தையும், முதலீட்டாளர்களும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications