தென்னிந்திய மாநிலங்கள் இந்த விஷயத்திலும் மாஸ் தான்.. அட்சய திருதியை விற்பனையில் சம்பவம்!
இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகையில் தங்கம் விற்பனையில் பெரிய அளவில் குறைந்துள்ளது. தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தாலும், ஈரான் போர் காரணமாக அதிகப்படியான விலை தடுமாற்றம் இருக்கும் காரணத்தாலும் மக்கள் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்கும் திட்டத்தை கைவிட்டு உள்ளனர்.
இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை அளவு (volume) அடிப்படையில் சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட தங்கத்தின் விலை 60 சதவீதம் உயர்ந்திருப்பதால் மிடில் கிளாஸ் மற்றும் லோவர் மிடில் கிளாஸ் மக்கள் தங்கம், வெள்ளி வாங்குவதை கைவிட்டுள்ளனர் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எடை அடிப்படையில் தங்கம் விற்பனை குறைந்தாலும், மதிப்பு அடிப்படையில் (value) 20 முதல் 25 சதவீதம் வரை வளர்ச்சி இருப்பதாக இந்திய புல்லியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) தலைவர் பிருத்விராஜ் கோதாரி கூறினார். இதற்கு காரணம் 60 சதவீத விலை உயர்வு.
அட்சய திருதியை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி திங்கள்கிழமை காலை வரை நீடித்தது. இந்த நாளில் செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை பெற வேண்டும் என்பதற்காக தங்கம் வாங்கும் வழக்கம் உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதயை நாளில் இந்தியா முழுவதும் தங்கம் விற்பனை படு ஜோராக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான விலை காரணமாக நகை கடையில் கூட்டமில்லாமல் பொலிவிழந்து காணப்பட்டது.

ஆனால் இந்த அட்சய திருதியை நாளில் தங்கம் 10 கிராம் ரூ.1,51,650 என்ற விலையில் (3% ஜிஎஸ்டியுடன் ரூ.1,56,244) வர்த்தகமானது. இந்த அதிகப்படியான விலை காரணமாக பலர் பெரிய அளவிலான நகைகளுக்கு பதிலாக எடைகுறைவான நகைகள், சிறிய தங்க நாணயங்கள் (2 கிராம், 5 கிராம்) மற்றும் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளை வாங்க விரும்பினர்.
இளம் தலைமுறையினர் ரூ.75,000 முதல் ரூ.2.5 லட்சம் வரையிலான விலையில் சிங்கிள் ஸ்டோன் (solitaire) நகைகளை அதிகம் வாங்கினர். இந்திய புல்லியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் எதிர்பார்ப்பின்படி, இந்த ஆண்டு 10.5 டன் தங்கம் மட்டுமே விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 15 டன் தங்கம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் அட்சய திருதியை தங்கம் விற்பனையில் தென் இந்தியா 40 சதவீதம் பங்கு வகித்தது. மேற்கு இந்தியா 25 சதவீதம், கிழக்கு 20 சதவீதம், வடக்கு 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தென் இந்தியாவில் மக்கள் மத்தியில் இன்னும் கனமான நகைகளுக்கு விருப்பம் அதிகம் இருந்தாலும், லேசான டிசைன்கள் பிரபலமடைந்து வருகின்றன. மேற்கு மற்றும் வட இந்தியாவில் லேசான நகைகளே அதிகம் வாங்கப்பட்டன.
இதேபோல் மக்கள் ஆன்லைன் வாயிலாகவும், கடைகளிலும் 1 கிராம் தங்கம், 5 கிராம் வெள்ளி ஆகியவற்றை அதிகளவில் வாங்கினர். பெரும்பாலானோர் அட்சிய திருதியை நாளில் சிறிய அளவிலாவது வாங்க வேண்டுமே என்ற இலக்குடன் குறைந்த அளவில் வாங்கினர்.












Click it and Unblock the Notifications