கேபினட்டில் இடம் பெற அழைப்பு விடுத்த தவெக.. ஐயுஎம்எல் திட்டம் என்ன? காதர் மொகைதீன் பதில்
சென்னை: விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என தவெக கூறியுள்ளது. இந்த நிலையில் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என ஐயுஎம் எல்-க்கும் தவெக அழைப்பு விடுத்ததாக காதர் மொகைதீன் கூறியுள்ளார். ஆனால் எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என காதர் மொகைதீன் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

விஜய் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணியில் உள்ளவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என கூறி வந்தார். அதன் அடிப்படையிலேயே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார். இதில் காங்கிரஸ் கட்சி திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
மற்ற கட்சிகள் அனைத்தும் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறியிருந்தன. இதில் தற்போது விசிக அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரம் ஐயுஎம்.எல்-க்கும் விஜய் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் காதர் மொகைதீன் எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-
இது பற்றி ஐயுஎம்.எல் காதர் மொகைதீன் கூறுகையில், நேற்றே என்னிடம் தவெகவினர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கூறினாங்க.. அப்போது நாங்க ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது எந்த நிபந்தனையும் இல்லாமல் தான்.. எந்த டிமாண்டும் பண்ணல.. எந்த கண்டிசஷனும் போடல..
உங்க நல்லாட்சி தொடர வேண்டும் என்று தான் நாங்க விருப்பப்படுகிறோம். எனவே அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றோம். எங்களுக்கு அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் யோசிக்க கூட இல்லை. அவங்க நல்ல எண்ணத்தில் எங்களை அமைச்சரவையில் இடம்பெற அழைக்கிறாங்க.. ஆனால் நாங்கள் அன்று எடுத்த முடிவிலேயே தவெகவுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் தான் ஆதரவு கொடுத்தோம்.
எங்கள் கட்சிக்காரர்கள் உடன் ஆலோசித்து தான், விஜய்யின் நல்லாட்சி தொடர்வதற்காக தான் நாங்கள் ஆதரவு கொடுத்தோம். எனவே இனிமேல் நாங்கள் எதுவும் ஆலோசித்து எல்லாம் முடிவு எடுக்கவில்லை. அன்று கூறியது போலவே விஜய்க்கு நிபந்தனையின்றி அவர் நல்லாட்சி தொடர ஆசைப்படுகிறோம். அமைச்சரவையில் கண்டிப்பாக நாங்கள் இடம்பெறவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications