“அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டார் ஆதவ் அர்ஜுனா”.. ரகசியத்தை போட்டு உடைத்த ஓ.எஸ்.மணியன்
சென்னை: "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல கட்சி மாறி மாறி வந்தவர். அதிமுகவிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டவர். பதவி கொடுக்காததால் தான் அவர் தவெகவில் இணைந்தார்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போட்டு உடைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அதிமுகவில் ஒரு பிரிவு தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால், அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுக மற்றும் அதிமுகவை இணைந்து அவதூறான கருத்தை தெரிவித்து வருகிறார். அவருடையை அரசியல் காலத்தை பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். அவர் எத்தனை கட்சிகள் மாறி மாறி வந்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பணியாற்றினார். திமுகவில் இருந்தார். அதற்குப் பின்னால் அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கேட்டார். ஆனால் இதெல்லாம் மறுக்கப்பட்ட காரணத்தால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தற்போது ஆதவ் அர்ஜுனா திமுக - அதிமுகவை தொடர்புபடுத்தி அவதூறான செய்திகளைச் சொல்லி வருகிறார். ஆதவ் அர்ஜூனா கூறும் தகவலை முற்றிலுமாக மறுக்கிறோம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில் திமுகவிற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். ஸ்டாலின் அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் 5 ஆண்டுகள் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாடு முழுவதும் பயணித்து திமுக அரசின் அலங்கோல ஆட்சியை, சட்டவிரோத செயல்களை, மக்கள் விரோத நடவடிக்கைகளை, குறிப்பாக திமுக அரசின் இயலாமையை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டசபை தேர்தலின்போதும் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று திமுக அரசின் மோசமான நடவடிக்கைகளை விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார்.
திமுகவை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்ததுதான் அக்கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இதையெல்லாம் அறியாமல் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார். அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களுடன் குதிரை பேரத்தை நடத்திவிட்டார்கள். அதனை மூடி மறைக்க எடப்பாடி பழனிசாமி மீது அவதூறான கருத்துகளைச் சொல்லி வருகிறார்" என ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தலுக்குப் பின்பு திமுக தனது கொள்கைகளை மறந்து, அதிமுகவோடு சேர்ந்து மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஓர் அரசை உருவாக்க முற்பட்டார்கள். இதனால் அதிமுகவில் ஒரு பிளவு ஏற்பட்டது. இதற்கு சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
அதிகாரத்துக்காகவோ, அமைச்சர் பதவிக்காகவோ வெளியில் வரவில்லை என அவர் சொல்லியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இணைந்து ஒரு ஆட்சியை உருவாக்க குதிரை பேரம் நடத்தினார்கள். அதை எதிர்த்தே சிவி சண்முகம் எங்களிடம் வந்தார்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications