தேர்தலுக்கு மத்தியில் வந்த குட்நியூஸ்.. சென்னையில் தங்கம் விலை ரூ.1000 சரிவு.. வெள்ளி 5000 ரூபாய் சரிவு!
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் இருக்கும் வேளையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது. இதன் மூலம் 3 நாட்களாக தங்கம், வெள்ளி விலை சரிந்து மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்க நகை வாங்க சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,448 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.98 குறைவாகும். 10 கிராமுக்கு கிட்டத்தட்ட 1000 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல், பொதுவாக நகை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூ.14,160 ஆக உள்ளது. மேலும், 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,810 ஆக விற்கப்படுகிறது. இந்த சரிவு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், தொடர்ந்து சரிந்து வருவது தங்கத்தை சேமிப்பாக பார்க்கும் மக்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.270 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 5000 ரூபாய் குறைந்து ரூ.2,70,000 ஆக உள்ளது.

MCX-ல் தங்கம்-வெள்ளி விலை
ஏப்ரல் 23 அன்று MCX சந்தையில் (multi commodity exchange) காலை வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை சுமார் 1 சதவீதம் குறைந்தது. வெள்ளி விலை 2 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியேற்றவும் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையேயான புதிய பதற்றம் காரணமாக முதலீட்டை மறுசீரமைப்பு செய்துவரும் காரணத்தால் இந்த சரிவு ஏற்பட்டது. அமெரிக்க டாலர் வலுவடைந்ததுடன் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட்க்கான தங்க பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.50 சதவீதம் சரிந்து 10 கிராமுக்கு ரூ.1,51,947-ஆக இருந்தன. மே மாத வெள்ளி ஒப்பந்தங்கள் சுமார் 2 சதவீதம் குறைந்து ஒரு கிலோ ரூ.2,43,856-ஆக வர்த்தகமானது.
டாலர் மற்றும் கச்சா எண்ணெய்
டாலர் இன்டெக்ஸ் 0.15 சதவீதம் உயர்ந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 2 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 103 டாலருக்கு மேல் வர்த்தகமானது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மத்திய கிழக்கில் எப்படியாவது சாதகமான சூழ்நிலை ஏற்படுமா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் மத்தியில் போர் தாக்குதல் இல்லையென்றாலும் ஹார்முஸ் வழியாக போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதே தற்போதைய பிரச்சனை.
ஈரான், அமெரிக்காவின் கடற்படை தடை தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காது என்று அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் "ஈரான் ஹார்முஸை திறக்க விரும்புகிறது. ஏனெனில் ஈரானுக்கு தினமும் 500 மில்லியன் டாலர் வருமானத்தை இழக்கிறது. இதனால் நிதி ரீதியாக பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்." என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும். இதனால் வட்டி விகிதக் குறைப்பு வாய்ப்பு குறையும். இந்த சூழல் தங்கம் போன்ற பாதுகாப்பு முதலீடுகளுக்கு சாதகமற்றதாக அமையும். எனவே முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை தொடர்ந்து விற்பனை செய்து வெளியேறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications