சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இடையில் ஒரு சில நாட்கள் குறைந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. தங்கம் விலை உயரப் பலரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளே காரணம் என நினைப்போம். ஆனால், இதற்குச் சீனாவும் கூட முக்கிய காரணமாக இருக்கிறதாகச் சொல்கிறார் ஆனந்த் சீனிவாசன் இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த 2 மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களால் கூட விரும்பியபடி தங்கத்தை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

தங்கம் விலை உயர்கிறது
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 வரை அதிகரித்துள்ளது. தங்கம் விலை இப்படி தொடர்ச்சியாக அதிகரிக்க டிரம்பும் அவரது தடாலடி வரி கொள்கைகளுமே காரணம் எனப் பலரும் நினைப்போம். அதாவது அவர் தொடர்ந்து வரி விதிப்பதால் அது சர்வதேச வர்த்தகத்தைப் பாதித்து இதனால் தங்கம் விலை உயர்கிறது என நாம் நினைப்போம். ஆனால், அமெரிக்கா மட்டுமின்றி சீனாவும் கூட தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருக்கிறதாம்.
ஆனந்த் சீனிவாசன்
இதைப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தங்கம் விலை ஏன் இந்தளவுக்கு உயர்கிறது என்பதை விளக்கியுள்ள அவர், வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை சாதனை படைத்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பிலேயே அது உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9000ஐ எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதே டிரெண்ட் தொடர்ந்தால்.. ஒரு வாரம் இல்லை 10 நாட்களில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,000ஐ தொட்டுவிடும். வரி, செய்கூலி எல்லாம் சேர்த்தால் ரூ.9500 வந்துவிடும். சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மையை டிரம்ப் கொண்டு வர தங்கம் விலை உயரவே செய்யும். இது நமக்கு நல்ல செய்தி. பல ஆண்டுகளாகத் தங்கத்தை சிறுக சிறுக வாங்கியவர்கள் நல்ல லாபம் பார்க்கலாம். தங்கம் தான் எப்போதும் ஆபத்பாண்டவன். மக்களுக்கு ஆபத்தான காலத்தில் அதுவே உதவும்.
சீனாவில் இருந்து வந்த நல்ல செய்தி
சீனாவுக்கு இப்போது மற்றொரு நற்செய்தி இருக்கிறது. இந்த முறை சீனாவில் இருந்து வந்திருக்கிறது. சீனா தன்னிடம் உள்ள அமெரிக்கக் கடன் பத்திரங்களை விற்றுவிட்டு அதை மற்ற விஷயங்களில் முதலீடு செய்து வருகிறது. மற்ற விஷயங்கள் எனச் சொன்னாலும் கூட அவர்கள் தங்கத்திலேயே முதலீடு செய்து வருவதாகப் பல சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த ரிப்போர்ட்படி சீனாவிடம் 750 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்கக் கடன் பத்திரங்கள் மட்டுமே இருக்கிறது என நினைக்க வேண்டாம். அவர்கள் பல ஊர்களில் கணக்குகளைத் தொடங்கி அங்கிருந்தும் அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். இதனால் அவர்களிடம் துல்லியமாக எவ்வளவு கடன் பத்திரம் இருக்கிறது என்பதை நம்மால் சொல்ல முடியவில்லை. இருப்பினும், அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் 57 பில்லியன் டாலரை விற்றுள்ளனர். அதற்குப் பதிலாகத் தங்கத்தை வாங்கியுள்ளனர்.
என்ன காரணம்
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்த அமெரிக்கக் கடன் பத்திரங்களுக்கு அமெரிக்கா தடை விதித்ததால் வந்த வினை இது. இது ஒரு பக்கம் இருக்க உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால், இதில் ஐரோப்பாவை கழற்றிவிட்டுவிட்டனர். இதை ஐரோப்பிய நாடுகள் எப்படிக் கையாளும் என்பது நமக்குத் தெரியாது. இந்த நிச்சயமற்ற தன்மை எல்லாம் தங்கம் விலை உயரவே காரணமாக இருக்கும்.
இனிமேல் இப்படி தான்
தங்கம் விலை இப்போது ராக்கெட்டை விட வேகமாக ஒளியின் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள் 3300 டாலர் வரை போகும் என்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தோம் என்றால சீனா தனது அமெரிக்கக் கடன் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை வாங்குவது நற்செய்தி தான்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications