இதுவே கடைசி சான்ஸ்! தாறுமாறாக பறக்க ஆரம்பித்த தங்கம் விலை.. இந்தியாவில் நாளை உச்சம் தொட போகுது!
சென்னை: தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்றைய தினம் இரவு கூட சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இரவு முழுக்க இதே டிரெண்ட் தொடர்ந்தால் நாளைய தினமும் இந்தியாவில் தங்கம் விலை உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றிலேயே தங்கம் விலை இந்தளவுக்கு வேகமாக உயர்ந்ததே இல்லை எனச் சொல்லும் அளவுக்குத் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தினசரி ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வந்த தங்கம் விலை, இப்போது இரண்டு முறை மாற்றி அமைக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

தங்கம் விலை
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஒவ்வொரு நாளும் இரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இன்று கூட தங்கம் விலை சவரனுக்கு ரூ 1400 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ 89 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ 175 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,125-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சம் தொடுவதே இதற்குப் பிரதானக் காரணமாக இருப்பதால் நாம் சர்வதேச சந்தை குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
உலக அளவில் பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றமும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகளும் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
சர்வதேச மார்கெட்
அமெரிக்காவில் இன்று அவுன்ஸ் தங்கம் 3,900 டாலரைத் தாண்டி வர்த்தகமானது. இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 1.5% உயர்ந்து 3950 டாலராக இருக்கிறது. கோல்ட் ப்யூச்சர்ஸும் 3,977 டாலராக இருந்தது. சர்வதேச அளவில் நடக்கும் பல்வேறு மாற்றங்கள் சேர்ந்தே தங்கம் விலையை இந்தளவுக்கு உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
காரணங்கள் என்ன
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகார்னு மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்தனர். இது அங்கு அரசியல் நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. பிரான்ஸில் கடந்த 2 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஜப்பானிலும் பிரதமராக சனே டகாய்ச்சி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு யென் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது.
அதேபோல அமெரிக்காவில் அரசு ஷட் டவுன் ஆறாவது நாளை எட்டியது. இதுவரை இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் மிகப் பெரியளவில் பெடரல் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்தது. மேலும், இந்தாண்டு நடக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை உச்சம்
இவை எல்லாம் சேர்த்தே தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை தங்கம் 50% உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு வரலாற்றில் இந்தளவுக்குத் தங்கம் விலை குறுகிய காலத்தில் உயர்ந்ததே இல்லையாம். இப்போது ஸ்பாட் தங்கம் 3950ஐ தொட்டுவிட்ட நிலையில், அது விரைவில் 4000 டாலரை தொட்டு புதிய சாதனை படைக்கும்.
சர்வதேச மார்கெட்டில் இரவு முழுக்க இதே (விலை உயர்வு) டிரெண்ட் தொடர்ந்தால் நாளை இந்தியச் சந்தைகளிலும் அது எதிரொலிக்கும். அதாவது தங்கம் விலை இந்தியாவிலும் நாளை உயர்ந்து புதிய உச்சம் தொடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications