அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்!
இந்திய மக்களின் வாழ்க்கையில் எப்படி ஸ்மார்ட்போன் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளதோ, அதேபோல் யூபிஐ சேவையும், ஆன்லைன் பண பரிமாற்றமும் ஒன்றியுள்ளது. நாளுக்கு நாள் ஆன்லைன் பண பரிமாற்றம் பயன்பாடு அதிகரித்து வரும் இதேவேளையில் மோசடியும் அதிகரித்து வருகிறது. பலதரப்பட்ட மக்கள் இதில் எளிதாக சிக்கிக்கொண்டு, பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையை சரி செய்ய மத்திய நிதியமைச்சகமும், வங்கிகளும், ஆர்பிஐயும் பல மாதங்களாக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிவையில் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பெரும் மோசடிகளைத் தடுக்க ஒரு முக்கியமான திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது.

ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆன்லைன் பண பரிமாற்றம் மூலம் செய்யப்படும் பெரிய தொகை அடிப்படையிலான பணப் பரிமாற்றங்களை ஒரு மணி நேரம் வரை தாமதப்படுத்தி, வாடிக்கையாளருக்கு ரத்து செய்யும் வாய்ப்பை வழங்கும் திட்டத்தை முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முடிவை எடுக்க முக்கிய காரணம் இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடி.
டிஜிட்டல் மோசடி
கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மோசடிகள் அதிகரித்துள்ளது. தேசிய சைபர் குற்ற அறிக்கை தளத்தின் தரவுகளின்படி, 2021-ல் 2.6 லட்சம் மோசடி வழக்குகள் மூலம் 551 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புகள் பதிவாகியிருந்தன. இது 2025-ல் 28 லட்சம் வழக்குகளாக அதிகரித்தது மூலம் 22,931 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புகள் புதிவாகியுள்ளது. எனவே, பணம் பரிமாற்ற அமைப்புகளில் மோசடியை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
ரூ.10,000க்கு மேல் பரிவர்த்தனை
RBI தற்போது முன்வைத்துள்ள திட்டத்தின் படி வங்கிகள் கணக்கு டூ வங்கி கணக்கு (account-to-account) அடிப்படையிலான பரிவர்த்தனைகளில் ரூ.10,000க்கு மேல் தொகை அனுப்படும் போது, பெறுநர் கணக்கில் கிரெடிட் செய்ய ஒரு மணி நேரம் வரை தாமதப்படுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த ஒரு மணி நேரத்தில் பணம் அனுப்பியவர் விரும்பினால் பரிவர்த்தனையை ரத்து செய்யலாம். பரிவர்த்தனை சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், வங்கிகள் நேரடியாக வாடிக்கையாளரிடம் உறுதிப்படுத்த கேட்கலாம். இந்த நடைமுறை மோசடியாளர்கள் பணத்தை உடனடியாக பெறுவதை தடுக்க முடியும்.
விலக்கு
இந்தத் திட்டம் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது. குறிப்பாக வணிகர் பணப் பரிவர்த்தனைகள், இ-மேண்டேட், NACH பரிவர்த்தனைகள் மற்றும் செக்குகள் ஆகியவை இந்த ஒரு மணி நேர தாமதத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது இத்தகைய ஒரு மணிநேரம் தாமதம் ஏற்பட்டால் மொத்த பேமெண்ட் சிஸ்டமும் முடங்கும்.
இதனால் வங்கி கணக்கு டூ வங்கி கணக்கு அடிப்படையிலான பரிவர்த்தனை மட்டுமே இந்த 1 மணிநேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஏன் ரூ.10,000 தொகை வரம்பு?
RBI இந்த வரம்பை தேர்வு செய்ததற்கு ஒரு காரணம் உள்ளது. ரூ.10,000க்கு மேல் உள்ள ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மோசடியில் மொத்த வழக்குகளில் வெறும் 45 சதவீதம் மட்டுமே என்றாலும், மொத்த மோசடி மதிப்பில் சுமார் 98.5 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது.
அதாவது, பெரிய தொகை பரிவர்த்தனைகளே மோசடியில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, 10000 ரூபாய் வரம்பு நிர்ணயம் மூலம் பெரும் பகுதி மோசடிகளை தடுக்க முடியும் என ஆர்பிஐ நம்புகிறது. இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications