ஒரே முதலீடு.. 386% லாபம்.! வெறும் ரூ.1 லட்சம் போட்டிருந்தால் இப்போது எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
சென்னை: 2018ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்குச் சந்தோஷம் தரும் ஒரு செய்தி வந்துள்ளது.. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதன் இறுதி விலையை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு சுமார் 386% லாபம் கிடைக்கிறது. வேறு எந்தவொரு முதலீட்டைக் காட்டிலும் அதிகபட்ச லாபம் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுக்க பொதுமக்கள் தொடர்ச்சியாகத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் தங்கமே உதவும் என்பதால் பொதுமக்கள் தொடர்ச்சியாகத் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். மக்களை டிஜிட்டல் தங்கத்தை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக ரிசர்வ் வங்கி தங்கப் பத்திர திட்டத்தைக் கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வந்தது.

தங்கப் பத்திரம்
தொடக்கத்தில் சற்று தயக்கம் இருந்தாலும் கூட அதன் பிறகு மக்கள் ஆர்வம் இதில் அதிகரித்தது. இந்த கடன் பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக உள்ள நிலையில், வரிசையாக அவை முதிர்ச்சி அடைந்து வருகிறது. அதன்படி 2018 SGB இப்போது முதிர்வடைந்து வருகிறது. அப்போது தங்கப் பத்திரத்தில் பணம் போட்டவர்களுக்கு, இப்போது அந்தத் தங்கம் ஜாக்பாட் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
கொட்டும் லாபம்
SGB 2018-19 சீரிஸ்-I இப்போது முதிர்ச்சி அடைந்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இது வரும் திங்கள்கிழமை மே 4ம் தேதி முதிர்வடைகிறது. ஒரு யூனிட் (அதாவது ஒரு கிராம்) தங்கத்திற்கு ரூ. 14,901 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, முதிர்வுத் தேதிக்கு முந்தைய மூன்று வணிக நாட்களின் (ஏப்ரல் 28, 29 மற்றும் 30) 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி ரூ.14,901 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு லாபம்
2018ல் இந்த கடன் பத்திரம், ஆன்லைன் மூலம் வாங்கியவர்களுக்கு ஒரு கிராம் விலை ரூ.3,064க்கு தரப்பட்டது. அந்த விலையை வைத்துக் கணக்கிட்டால் லாபம் தலையைச் சுற்றுவதாகவே இருக்கிறது.
முதலீட்டு விலை: ரூ. 3,064.
தற்போதைய விலை: ரூ. 14,901.
கிராமுக்கு கிடைத்த லாபம்: ரூ. 11,837.
சதவீத அடிப்படையில் பார்த்தால், இது சுமார் 386.32% என்ற அபரிமிதமான லாபமாகும். அதாவது, 2018ல் நீங்கள் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு தோராயமாக ரூ.4,86,320 ஆக உயர்ந்திருக்கும்.
2.50% வட்டி கூடுதல் வருமானம்
தங்கத்தின் விலை உயர்வால் கிடைத்த லாபம் ஒருபுறம் இருக்க, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்ப முதலீட்டுத் தொகையின் அடிப்படையில் ஆண்டுக்கு 2.50% வட்டி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. கடைசி தவணை வட்டி தற்போது அசலுடன் சேர்த்து வழங்கப்படும். விலையேற்றத்தால் வந்த லாபம் ஒரு பக்கம் என்றால் இது இன்னொரு பக்கம் லாபமாக வந்திருக்கிறது.
லாபமே சாட்சி
நேரடியாகத் தங்கத்தை வாங்கி லாக்கரில் வைப்பதை விட, இதுபோல டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரங்களாகச் சேமிப்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதற்கு இந்த 386% லாபமே சாட்சி. தங்கத்தின் விலை ஏறுவது ஒரு பக்கம் லாபம் என்றால், அரசு வழங்கும் வட்டி மற்றொரு பக்கம் கூடுதல் இனிப்பு. அடடே இப்போது சொல்லுங்க இந்த தங்க பத்திரத்தை எப்படி வாங்கலாம் என நீங்கள் கேட்கலாம். இருப்பினும், தங்கம் விலை உயர்வால் மத்திய அரசுக்கு இதில் கடும் நஷ்டம் ஏற்படுவதால் கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி இந்த கடன் பத்திரங்களை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications