சத்தீஸ்கர் வேதாந்தா மின்உற்பத்தி நிலையத்தில் விபத்து.. 9 பேர் பலி.. மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவமா?
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் பவர் பிளாண்ட்டில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். சில தொழிலாளர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அகர்வால் தனது வேதாந்தா குழுமத்தின் கீழ் சுரங்கம், உலோக உற்பத்தி, எண்ணெய், எரிவாயு, இரும்பு, ஸ்டீல், மின்சாரம் என பல துறையில் வர்த்தகம் செய்து வருகிறது. தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல இடங்களில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் மின்சார உற்பத்தி தளத்தில் இன்று விபத்து ஏற்பட்டு உள்ளது.

விபத்து எப்படி ஏற்பட்டது?
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் சக்தி மாவட்டத்தின் சிங்கிதராய் கிராமத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் பவர் பிளாண்ட்டில் இந்த விபத்து நடைபெற்றது. முதல்கட்ட தகவல்கள் அடிப்படையில், பவர் பிளான்டில் பாய்லர் டியூப் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதே விபத்துக்கான முக்கிய காரணம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்பு மொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெடிப்பு சத்தம் கேட்ட உடனடியாக உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கின.
விபத்தில் படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்கு இடையே இன்னும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே மீட்டு பணிகளை கவனித்து வருகின்றனர். விபத்துக்கான முழு காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
இந்த விபத்து வேதாந்தா நிறுவனத்தின் பெயரை மீண்டும் நினைவூட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்த ஆலையில் நச்சுப் புகையால் காற்று மாசுப்பாடும், கழிவுகள் மூலம் தண்ணீர் மாசுப்பாடு ஏற்படுவதாக கூறி உள்ளூர் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 2018 போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதைத் தொடர்ந்து ஆலைக்கு பூட்டு போடப்பட்டு மூடப்பட்டது. இந்தப் பின்னணியில் சத்தீஸ்கர் விபத்து தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications