விப்ரோ பங்குகள் MRF பங்குகள் போல் தடாலடியாக உயருமாம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் புது கணக்கு!
இந்திய ஐடி துறையில் முக்கிய இடம் வகிக்கும் விப்ரோ நிறுவனம், சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகளை மீண்டும் வாங்கும் (buyback) திட்டத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முடிவு, முதலீட்டாளர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
பைபேக் என்பது, ஒரு நிறுவனம் தன் பங்குகளை மார்க்கெட்டில் இருந்து மீண்டும் வாங்கும் செயலாகும். இது பொதுவாக சந்தை விலையை விட அதிக விலையில் (premium) நடைபெறும். உதாரணமாக, ஒரு பங்கு ரூ.203க்கு வர்த்தகம் செய்யப்பட்டால், நிறுவனம் அதை ரூ.250க்கு வாங்கலாம். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு உடனடி லாப வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது விப்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பின் ஏப்ரல் 17ஆம் தேதி வர்த்தக முடிவில் விப்ரோ பங்கு விலையான 210 ரூபாயில் இருந்து 19 சதவீத ப்ரீமியம் விலையில் பங்குகளை பைபேக் மூலம் வாங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த பைபேக் செயல்முறை Tender Offer முறையில் நடைபெறும். இதில், பங்குதாரர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை நிறுவனத்திற்கு விற்க முன்வரலாம். ஆனால், அனைவரின் பங்குகளும் முழுமையாக ஏற்கப்படாது. இதற்கு Pro-rata basis என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, ஒவ்வொருவரும் விற்பனை செய்ய அளிக்கும் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே நிறுவனம் வாங்கும். சிறிய அளவு பங்குகள் வைத்திருக்கும் ரீட்டெயில் முதலீட்டாளர்களுக்கு முழுமையாக வாங்கப்பட்டு அதற்கான தொகை கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
யாருக்கு அதிக நன்மை?
விப்ரோவில் ப்ரமோட்டர்கள் சுமார் 75% பங்குகளை வைத்திருப்பதால், இந்த பைபேக்கில் அதிக நன்மை அவர்களுக்கே கிடைக்கும். ரூ.15,000 கோடி பைபேக் திட்டத்தில், சுமார் ரூ.10,000 கோடி வரை ப்ரமோட்டர்களிடம் செல்லும் வாய்ப்பு உள்ளது.
பங்குகள் குறையும் போது என்ன நடக்கும்?
பைபேக் செய்யப்பட்ட பங்குகளை நிறுவனம் சந்தைக்கு மீண்டும் விடாது. அவை extinguish செய்யப்படும். இதனால் வர்த்தக சந்தையில் இருக்கும் மொத்த பங்குகளின் எண்ணிக்கை குறையும். உதாரணமாக, 200 கோடி பங்குகள் இருந்தால், 60 கோடி பங்குகள் பைபேக் செய்யப்பட்ட பிறகு 140 கோடி பங்குகள் மட்டுமே இருக்கும். இதனால் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகள் எண்ணிக்கை குறைந்து வர்த்தகம் அதிகரிக்கும் போது சப்ளை டிமாண்ட் உருவாகி பங்கு விலை அதிகரிக்கும்.
EPS மற்றும் பங்கு விலை உயர்வு
EPS (Earnings Per Share) என்பது ஒரு பங்கிற்கு கிடைக்கும் லாபத்தை குறிக்கும். பங்குகள் எண்ணிக்கை குறைந்தால், லாபம் குறைந்த பங்குகளுக்கு பகிரப்படும். இதனால் EPS அதிகரிக்கும். EPS அதிகரிப்பது, பங்கு விலையை உயர்த்தும் முக்கிய காரணமாக அமையும். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால லாப வாய்ப்பு உருவாகும். சரி எப்படி விப்ரோ பங்குகள் எம்ஆர்எப் போல் உயரும்?.
MRF மாதிரி உயர்வு சாத்தியமா?
MRF பங்கு அதிக விலைக்கு வர்த்தகம் செய்யப்படுவதற்கான முக்கிய காரணம், மார்க்கெட்டில் கிடைக்கும் பங்குகள் குறைவு மற்றும் ப்ரமோட்டர் ஹோல்டிங் அதிகம் என்பதுதான். அதேபோல், விப்ரோவும் பைபேக் மூலம் பங்குகளை குறைத்தால், சந்தையில் கிடைக்கும் பங்குகள் குறைந்து, தேவை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் பங்கு விலை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகலாம் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தெரிவித்தார்.
இதேவேளையில் இக்காலக்கட்டத்தில் விப்ரோ வர்த்தகம், வருமானம் என அனைத்தும் அதிகரிக்க வேண்டும் அப்போது தான் எம்ஆர்எப் போல் உயரும். கடந்த 20 வருடங்களாக எம்ஆர்எப் இந்திய டையர் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பிலும், வர்த்தகத்திலும் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. விப்ரோ இந்த ஏஐ அலையில் சிக்கிக்கொண்டால் பங்கு விலை குறையவும் வாய்ப்புள்ளது. எனவே விப்ரோ பங்கு விலை MRF போல் உயர இந்நிறுவனத்தின் செயல்பாடு தான் முக்கியமான காரணமாக இருக்கும். இதுவும் இது நீண்ட கால பயணம், உடனடியாக நடக்க வாய்ப்புகள் 100% இல்லை.
விப்ரோவின் இந்த பைபேக் நடவடிக்கை, சாதாரண பங்கு வாங்கும் திட்டம் அல்ல. இது நிறுவனத்தின் பங்கு அமைப்பை மாற்றும் ஒரு முக்கியமான நடவடிக்கை. வர்த்தக சந்தையில் வர்த்தகத்திற்கு உள்ள பங்குகள் குறையும் போது , EPS உயரும், பங்கு விலை ஏற்றம் காணும். இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்து, முதலீட்டாளர்களுக்கு முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications