திருமாவளவனை முதல்வராக ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.. சிவி சண்முகம் ஒரே போடு!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்ற எங்களின் ஆலோசனையையும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்று கூறிய சிவி சண்முகம், அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு சார்பாக நம்பிக்கை தீர்மானத்திற்கு அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இந்த 25 எம்எல்ஏ-க்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகம் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது.

அதாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக்கலாம் என்று யாரும் நினைத்து பார்த்திடாத அரிய வாய்ப்பு அமைந்தது. விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்கலாம் என்று திமுக தரப்பில் முன்மொழியப்பட்டது. திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திருமாவளவன் முதல்வர் என்றும் கூறினர். அமைச்சரவையை அதிமுக எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரை வந்தது.
நாங்களும் கடைசியாக விசிகவுக்கு ஒரு காலம் வந்தது என்று நினைத்து ஏற்க தயாரானோம். ஆனால் திருமாவளவன் முதல்வர் என்பதையே எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். நான் தான் முதல்வர் என்று கூறினார். அதற்கு திமுக எதிர்ப்பே அதிமுகவின் நோக்கம். இதனை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.. மனைவியே விஷம் வைத்துவிடுவார்கள் என்றோம்.
அப்போது நாங்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு கூறுவோம் என்று சொன்னதையும் ஏற்கவில்லை. யாருக்கு பதவி ஆசை என்பதை எடப்பாடி பழனிசாமி மனதை தொட்டு சொல்ல வேண்டும். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. இப்போதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் சட்டசபைக் குழுத் தலைவர் எஸ்பி வேலுமணி தான்.
சட்டசபை நிர்வாகத்தில் அரசியல் கட்சிகளின் உத்தரவு செல்லாது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி எங்களிடம் பெற்றுக் கொடுத்த கடிதம் போலியானது என்று அதிருப்தி கூறி இருக்கிறோம். இதனை சபாநாடகர் விசாரிப்பார். எம்எல்ஏ-க்கள் சேர்ந்துதான் கொறடாவை தேர்வு செய்ய முடியும். பொதுச்செயலாளரால் கொறடாவை தேர்வு செய்ய முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications