அன்லிமிடெட் டேட்டா பிளான்களுக்கு ஆபத்து! பெரிய ஆப்பு வைக்கும் ஏர்டெல்.. எதிர்பாராத சிக்கல்!
டெல்லி: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ரீசார்ஜ் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே யூசர்களுக்கு இடியை இறக்கும் விதமாகப் புதிய கட்டண முறையைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்தக் கட்டண முறையால் டேட்டாவை அதிகம் யூஸ் செய்வோர் மட்டுமே அதிகக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜியோ வருகைக்குப் பிறகு டேட்டா கட்டணம் என்பது மிகப் பெரியளவில் சரிந்தது. வீடியோ ஸ்ட்ரீமிங், சமூக வலைத்தளம், இணையச் சேவை ஆகியவை பல கோடி பேரின் அன்றாட வாழ்க்கையில் இடம் பிடித்தன. அதேநேரம் இதனால் டெலிகாம் நிறுவனங்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே பல டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் கட்டணத்தை உயர்த்தி வருகிறது.

ஏர்டெல்
இதற்கிடையே இந்தியாவில் உள்ள டேட்டா கட்டண முறை தொடர்பாக ஏர்டெல் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதாவது இந்தியாவில் அதிகம் இணையத்தைப் பயன்படுத்தும் யூசர்கள் குறைவான கட்டணத்தைச் செலுத்துவதாகவும்.. ஏழைப் பயனர்கள் அதிகக் கட்டணம் செலுத்துவதாகவும் ஏர்டெல் கூறியுள்ளது. இந்தியாவின் அன்லிமிடெட் மொபைல் டேட்டா கட்டண முறை உடைந்த நிலையில் இருப்பதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்த நிலை தான் ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்கி இருப்பதாக ஏர்டெல் துணைத் தலைவர் கோபால் மிட்டல் தெரிவித்தார். பணக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டியதைவிடக் குறைவாகவும், ஏழைகள் தங்களுக்குத் தேவையை விட மிக அதிகமாகவும் டேட்டா கட்டணத்தைச் செலுத்துகிறார்கள் என்று என்று ஏர்டெல் துணைத் தலைவர் கோபால் மிட்டல் தெரிவித்துள்ளார்.
மிக குறைவு
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அன்லிமிடெட் பிளான்களின் விலை மிக மிகக் குறைவு. இதனால், யூசர்கள் ₹340 அல்லது ₹350 ரீசார்ஜ் செய்துவிட்டால், அதற்கு மேல் நிறுவனங்களால் கூடுதல் வருவாய் ஈட்ட முடிவதில்லை. அதாவது ஒரு யூசர் குறைவாகப் பயன்படுத்தினாலும் அதிகமாகப் பயன்படுத்தினாலும் அதிகபட்சமே இதுதான் கட்டணமாக இருக்கிறது. இதுவே முக்கியப் பிரச்சனை. இதற்கு, பல அடுக்கு முறை கட்டண அமைப்பு தேவைப்படலாம் என ஏர்டெல் கருதுகிறது.
புதிய முறை
கடந்த சில ஆண்டுகளாகவே டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களைத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இருப்பினும், அது நல்ல தீர்வை கொடுப்பதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க ஏர்டெல் ஒரு புதிய வியூகத்தை முன்வைக்கிறது. அதாவது இனி வரும் காலங்களில் வெறும் என்ட்ரி-லெவல் பிளான்களின் விலையை உயர்த்துவது மட்டும் தீர்வாகாது என்றும் அதற்குப் பதிலாக, மின்சாரக் கட்டணத்தைப் போல நுகர்வோர் பயன்படுத்தும் டேட்டாவின் அளவிற்கு ஏற்ப வெவ்வேறு கட்டணப் பிரிவுகளைக் கொண்டு வர டெலிகாம் துறை திட்டமிட்டு வருகிறது. அதாவது, குறைவாகப் பயன்படுத்துபவருக்குக் குறைந்த கட்டணமும், விடிய விடிய டேட்டாவை காலி செய்பவர்களுக்குக் கூடுதல் கட்டணமும் விதிக்கப்படலாம்.
ஸ்மார்ட் போன்
அதேபோல ஸ்மார்ட்போன் விலை உயர்வு குறித்தும் ஏர்டெல் கவலை தெரிவித்துள்ளது. செல்போன் விலை ஏறுவது யூசர்கள் அப்டேட் ஆகும் வேகத்தைக் குறைக்கக்கூடும். சமீப வாரங்களில் கைப்பேசி விலைகள் உயர்ந்ததால், பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதில் அழுத்தம் ஏற்படுகிறது. இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், இதை நிராகரிக்க முடியாது என்று ஏர்டெல் நிர்வாக இயக்குநர் சஷ்வத் ஷர்மா தெரிவித்தார்.
மார்ச் காலாண்டில், ஏர்டெல் 4.7 மில்லியன் புதிய மொபைல் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது. இதில் 5.8 மில்லியன் பேர் ஸ்மார்ட்போன் பயனர்கள். இக்காலாண்டின் சராசரி வருவாய் ₹257 ஆகப் பதிவானது. வரும் காலங்களில் அதிகக் கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்டு பயனர்கள், அதிக டேட்டா பயன்பாட்டுத் திட்டங்களுக்கு மேம்படுத்தும் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications