"எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. தயாரா இருங்க”.. திமுகவினரிடம் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
சென்னை: திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது, திமுக வெற்றி பெற வேண்டும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வாக்களித்தவர்கள் ஆதரவில் தான் தவெக வண்டி ஓடுகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் மாற்றுக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை சீரழிய விடமாட்டோம். தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு என பலவற்றிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு துணையாக நாம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சீரழிய விடாமல் திமுக தடுக்கும் பொறுப்பும் கடமையும் திமுகவுக்கு உண்டு. தமிழன் நிலத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது திமுக.
திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக வெற்றி பெற வேண்டும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வாக்களித்தவா்கள் ஆதரவில் தான் தவெக வண்டி ஓடுகிறது. அதனால், தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். 6 மாதங்களில் கூட வரலாம்.
திமுக ஆட்சியில் தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் வளர்ச்சி அடைந்தது. நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலங்களின் பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியது. தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தொழில்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன. தற்போது நடக்கும் அதிக குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர்
அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள். ஓட்டுப் போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள். " எனத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications