"அவசரப்பட்டுட்டீங்க விஜய்!" அரசியல் பாடம் எடுத்த டி.கே.எஸ். இளங்கோவன்.. வசமாக சிக்கிய தவெக
சென்னை: தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன பிறகும் தனிப்பெரும் கட்சியான விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாததே இதற்குக் காரணம். இதற்கிடையே விஜய்யின் அரசியல் நகர்வுகளில் உள்ள சறுக்கல்கள் என்ன.. ஆட்சி அமைக்க முடியாமல் போக என்ன காரணம் என்பது குறித்து திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
தவெக தமிழ்நாடு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இதுவரை காங்கிரஸ், இரு இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இருப்பினும், மேஜாரிட்டி நம்பர் இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் விஜய் திணறி வருகிறார்.

தவறு என்ன
இதற்கிடையே நம்பர் கேமில் விஜய் செய்த தவறுகளைத் தி.மு.க சுட்டிக்காட்டியுள்ளது. திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் இது தொடர்பாக சில முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றதால் தவெகவின் உண்மை பலம் 107. இந்த 107 இடங்களுடன் அவர் தனித்து ஆளுநரைச் சந்தித்திருந்தால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைத்திருப்பார். அதன் பிறகு அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கலாம்.
ஆளுநர் கேட்க தான் செய்வார்
ஆனால், விஜய் வேறு ஒரு கட்சியைச் சேர்த்துக் கொண்டு 112 என்ற நம்பருடன் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியதுதான் தவறு. 118 என்ற மெஜாரிட்டி இல்லாதபோது, கூட்டணி ஆட்சி என்று சொன்னால் ஆளுநர் கண்டிப்பாகத் தேவையான பெரும்பான்மை நம்பரை கேட்பார். இப்போது அரசு அமையாமல் தாமதமாவதற்கு இதுவே காரணம்" என்றார்.
அமமுக விவகாரம்
இதற்கிடையே அமமுக எம்.எல்.ஏவின் கையெழுத்தைத் தவெக போலியாக உருவாக்கியதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் புகார் அளித்துள்ளார். அதாவது முன்னதாக நேற்று ஆளுநருக்கு விஜய் அளித்த கடிதத்தில் அமமுக எம்எல்ஏ கடிதமும் இருந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த டிடிவி தினகரன், தனது கட்சி எம்எல்ஏவின் கையெழுத்தைப் போலியாக பெற்றதாகச் சாடினார்.
இது தொடர்பாகப் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், "எம்.எல்.ஏ ஆதரவு தராதபோது ஏன் அத்தகைய கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்க வேண்டும்? அது தவறு. இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் நீதிமன்றத்தில் அதை நிரூபித்துக் கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம்
தற்போது தமிழக அரசியலில் நிலவும் சூழல் ஒரு த்ரில்லர் படம் போல மாறியுள்ளது.. விஜய்க்கு காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் ஆதரவு அளித்துள்ளன. ஆனால், கடைசி நேரத்தில் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க மற்றும் ஐ.யு.எம்.எல் (IUML) ஆகியவை ஆதரவு அளிக்கப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியது விஜய்க்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது திருமாவளவன் தான் கிங் மேக்கராக இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகமும் இப்போது வி.சி.க தலைவர் திருமாவளவனின் முடிவுக்காகக் காத்திருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு அவர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. விசிக வசம் இரு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக விசிக முடிவு செய்தால் மட்டுமே விஜய்யால் முதல்வராக முடியும்!












Click it and Unblock the Notifications