ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கிய அதிமுக.. யாருக்கு வாழ்த்து சொல்கிறார் எடப்பாடி?
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இருந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் சென்னை திரும்பிவிட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமியின் பதிவுக்கான பின்னணி குறித்த விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான பின்னரும் கூட இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறது. இதனிடையே திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாக வதந்திகள் பரவியது. அதற்கேற்ப அதிமுக எம்எல்ஏ-க்கள் திடீரென புதுச்சேரி அழைத்து செல்லப்பட்டு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனால் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்கிறதா அல்லது தவெக குதிரை பேரத்தில் இருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. அதிமுக நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமி முதல்வராவார் என்று பேசி பரபரப்பை கிளப்பினர். இந்த நிலையில் இன்று காலை அதிமுகவின் 28 எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின் எடப்பாடி பழனிசாமி ஒரு பதிவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி, நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அதிமுக ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பின் வாங்கிவிட்டதாக புரிந்து கொள்ள முடிகிறது. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தவெக கட்சியின் பெயரையோ, விஜய்யின் பெயரையோ கூட சொல்லவில்லை.
இதுவும் பேசுபொருளாகி இருக்கிறது. சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்திருக்கிறது. அதிமுக தொண்டர்கள் பலரும் தவெக பக்கம் சாய தொடங்கி இருக்கின்றனர். இதனால் அதிமுகவின் பழைய பெருமையை காக்க எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications