மகளிர் உரிமைத் தொகை.. ஆயிரமா? ரூ.2500ஆ? அக்கவுண்டுக்கு வருவதில் உள்ள பெரும் சிக்கல்? என்ன நடக்கும்?
சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தற்போது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் சூழ்நிலையில், இந்த மாதம் பெண்களுக்கு ரூ.1,000 வருமா? அல்லது தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.2,500 வழங்கப்படுமா? என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அதே நேரத்தில் மே மாதம் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழக அரசின் மிக முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக கருதப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது. குடும்ப செலவுகள், குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு இந்த தொகை பெரும் உதவியாக இருந்ததாக பல பெண்கள் கூறி வந்தனர்.
மகளிர் உரிமை தொகை
குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த திட்டம் முக்கிய ஆதரவாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மே மாத உரிமைத் தொகை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. திமுக அரசின் அமைச்சரவை பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய அரசு இன்னும் முழுமையாக பொறுப்பேற்காத சூழல் நிலவுகிறது. இதனால் அரசுத் துறைகளில் நிதி ஒதுக்கீடு மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக மந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு
பொதுவாக அரசின் நிதி ஒதுக்கீடுகள் அமைச்சரவை ஒப்புதல் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதிகளுடன் தான் நடைமுறைக்கு வரும். தற்போது இடைக்கால நிர்வாக சூழல் நிலவுவதால், மகளிர் உரிமைத் தொகைக்கான நிதி விடுவிப்பில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் வழக்கம்போல் மே 15ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் தொகை வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய்
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று முக்கிய வாக்குறுதி அளித்திருந்தார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் தொகை வழங்கப்படும் என்ற நம்பிக்கை பலரிடமும் உருவாகியுள்ளது.
தற்போது தவெக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளதால், இந்த மாதத்திலேயே ரூ.2,500 வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெண்களின் எதிர்பார்ப்பு
சிலர் உடனடியாக புதிய தொகை அமலுக்கு வரும் என எதிர்பார்க்க, மற்றொரு தரப்பு நிர்வாக நடைமுறைகள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு காரணமாக சிறிது காலம் ஆகலாம் என கூறுகின்றனர். அரசியல் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பெண்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக மாதந்தோறும் இந்த தொகையை நம்பி வாழும் குடும்பங்கள் அதிகமாக இருப்பதால், புதிய அரசு விரைவாக தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications