மீண்டும் ரெடியாகும் நேரு அரங்கம்! சி.ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்
சென்னை: விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில் முதல்வர் ஆவது உறுதி ஆகி இருக்கிறது. இதையடுத்து சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் மீண்டும் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று ஆளுநர் விஜய்யை பதவியேற்க அழைக்காததால், நேரு ஸ்டேடியத்தில் விஜய் பதவியேற்பு விழாவுக்கான பணிகள் அப்படியே பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக இன்று மாலை 6.40 மணியளவில் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்தார். அப்போது தன்னிடம் விஜய் பெரும்பான்மை இருப்பதாகவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறும் கூறியுள்ளார். இதனால் விஜய் தமிழகத்தின் முதல்வர் ஆக இருக்கிறார்.

அழைப்பு விடுக்காத ஆளுநர்
விஜய் முதல்வராக பதவி ஏற்கும் விழாவானது சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் விஜய் ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்காததால் இந்த பதவியேற்பாட்டுக்கான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் விஜய் பதவியேற்பு விழா நேற்று நடக்கவில்லை.
காங்கிரஸ் நேற்றே விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இடதுசாரிகள் மற்றும் விசிக நாளை ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக கூறியது. இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிக்க முடியாது என்று கூறியது. இதனால் விஜய் எப்படி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைப்பார்? அவர் முதல்வர் ஆவது சந்தேகம் தான் எனவும் தகவல்கள் பரவின.
மாலையில் மாறிய நிலைமை
அதே சமயத்தில் அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் தவெகவினரும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆளுநரும் விஜய்யை பதவியேற்க அழைப்பு விடுக்கவில்லை. அதாவது இருமுறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறியபோதிலும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தொண்டர்களும் மிகுந்த கவலையில் ஆழந்தனர்.
ஆனால் இன்று மாலையில் அப்படியே நிலைமை மாறியது. கம்யூனிஸ்டு கட்சிகள் அடுத்தடுத்து விஜய்க்கு ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து நேற்று ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறிய இந்திய முஸ்லீம் லீக்கும் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. விசிக திருமாவளவனும் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக கூறியதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து விஜய் இன்று மாலை 6.40 மணியளவில் ஆளுநர் ஆர்லேகரை மீண்டும் 3 வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தெரிவித்தார்.
மீண்டும் தயாராகும் நேரு ஸ்டேடியம்
விஜய்யின் தவெகவுக்கு (108) காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விசிக (2), இந்திய முஸ்லீம் லீக் (2) என ஆதரவு அளித்துள்ளதால் தற்போது விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 121 ஆக கிடைத்துள்ளது. இதனால் விஜய் முதல்வர் ஆவது உறுதியாகி உள்ளது. ஆளுநரும் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் விஜய் ரசிகர்கள், தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு புறம் இருக்க விஜய் பதவியேற்பு விழா நாளை காலை நடைபெற உள்ளதாகவும், இதற்காக ஏற்கனவே நேரு உள்விளையாட்டு அரங்கம் மீண்டும் தயாராகி வருகிறதாம். நேற்று பதவியேற்புகான ஏற்பாடுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் இன்று விஜய் முதல்வர் ஆக உள்ளதால் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.














Click it and Unblock the Notifications