எஸ்பி வேலுமணி பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு.. சபாநாயகர் சொன்ன பின்பும் அரங்கேறிய சலசலப்பு!
சென்னை: முதல்வர் விஜய் சார்பாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது அதிமுக சார்பாக எஸ்பி வேலுமணி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தரப்பில் ஒரு கட்சிக்கு ஒருவருக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது. ஆனாலும் எஸ்பி வேலுமணி தொடர்ந்து பேசிய முயற்சித்ததால், சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தவெக அரசுக்கானது என்பதை விடவும், அதிமுகவுக்கானது என்றே சொல்லலாம்.

ஏனென்றால் தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுக்கு மொத்தமாக 25 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் 22 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்தார். அவரைத் தொடர்ந்து, திடீரென எஸ்பி வேலுமணி எழுந்து பேச அனுமதி கோரினார். சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்கிய நிலையில், இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சியின் சார்பில் ஏற்கனவே தலைவர் பேசிவிட்டார், பிறகு எதற்கு மற்றொருவர்? என்று அவர்கள் கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு, "அவர் பேச அனுமதி கேட்டுள்ளார், பேசட்டும்" என்று கூறிய பின்பும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சமாதானம் அடையவில்லை. ஒருகட்டத்தில் இபிஎஸ் தரப்பிற்கும் வேலுமணி தரப்பிற்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக குறுக்கிட்டும், எஸ்பி வேலுமணி தங்களின் ஆதரவு தவெகவுக்கு என்று அறிவித்தார். எந்தவித பதவிக்காகவும் ஆதரவு கூறவில்லை என்று தெரிவித்த எஸ்பி வேலுமணி, விஜய் கொண்டு வந்த திட்டத்திற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் அடுத்தது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications