"24 எம்.எல்.ஏக்களின் பதவிகளை பறித்த எடப்பாடியார் ஒருவரை மட்டும் விட்டது ஏன்?” கு.ப.கிருஷ்ணன் கேள்வி!
சென்னை: "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அத்தனை எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடியார் பறித்துள்ளார். ஆனால் ஒருவரது பதவியை மட்டும் அவர் பறிக்கவில்லை. அதற்கான காரணத்தை அவர் தெரியப்படுத்த வேண்டும்." என தவெக நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக டெல்டா மண்டல கண்காணிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் கு.ப.கிருஷ்ணன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்த கு.ப.கிருஷ்ணன், "தமிழக முதலமைச்சர் விஜய் காலையில் 9:30 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். தினமும் ஒவ்வொரு துறையை ஆய்வு செய்து வருகிறார். அதன் முடிவுகளும் அன்றைய தினமே தெரிய வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதா என கேட்கிறீர்கள். இந்த தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அவரது பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள்.
தமிழக வெற்றி கழகம் மூன்று டிஜிட் நம்பரில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக இரண்டு டிஜிட் நம்பரில் தான் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் தான் வெற்றி பெறும். மக்களின் எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார். ஊழல் இல்லாத தூய்மையான அரசை தருவோம்.
தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்த அத்தனை எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடியார் பறித்துள்ளார். ஆனால் ஒருவரது பதவியை மட்டும் அவர் பறிக்கவில்லை. அதற்கான காரணத்தை அவர் தெரியப்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களைக் கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 22 பேர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக கட்சிக்குள் பெறும் குழப்பம் வெடித்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஆதரவளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கினார். 24 எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக மாநில மகளிர் அணி இணை செயலாளர் பதவியில் இருக்கும் லீமா ரோஸ் மார்ட்டின் பதவியை மட்டும் பறிக்கவில்லை என்று விமர்சனம் கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications